ADDED : மே 23, 2026 04:10 AM
தார்வாட்: வீட்டில் தனியாக இருந்த சிறுவனுக்கு, முகமுடி அணிந்த மர்ம கும்பல் ஒரு ஊசி போட்டு சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவின், நெலகுட்டா கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டா கானிகேரா, 11. நேற்று முன் தினம் இவரது பெற்றோர் வயல் பணிக்கு சென்றதால், மணிகண்டா தனியாக வீட்டில் இருந்தார். அப்போது முகமுடி அணிந்து, பைக்கில் வந்த மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்தனர்.
அப்போது, இரண்டு நபர்களும், சிறுவனை கெட்டியாக பிடித்து கொண்டு, வாயை அடைத்து ஏதோ ஒரு ஊசியை, சிறுவனின் இடது கையில் குத்தி விட்டு சென்றனர். இதில் சிறுவன் சிறிது நேரம் மயங்கி கிடந்தார்.
மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோரிடம், சிறுவன் நடந்ததை கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனுக்கு ஊசி போட்ட முகமூடி நபர்களை யாரும் பார்க்கவும் இல்லை. மணிகண்டா கானிகேராவுக்கு மட்டுமே, ஊசி போடப்பட்டுள்ளது. அது விஷ ஊசியாக இருக்கலாம் என பயந்து, மகனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் சிறுவனை பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு ஊசி போடப்பட்டதற்கான, எந்த அடையாளமும் இல்லை. சிறுவனின் ஆரோக்கியத்திலும், எந்த பாதிப்பும் இல்லை என, கூறியதால், பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து, குந்த்கோல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் நேற்று கிராமத்துக்கு வந்து, ஆய்வு செய்தனர்.
