/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணமான ஒரே மாதத்தில் தம்பதியிடையே விரிசல்
/
திருமணமான ஒரே மாதத்தில் தம்பதியிடையே விரிசல்
ADDED : ஜன 25, 2026 05:21 AM
அத்திப்பள்ளி: திருமணமான ஒரே மாதத்தில், தம்பதிக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், அத்திப்பள்ளியில் வசிப்பவர் அம்பரிஷ், 27. இவருக்கும், நந்தினி, 22, என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன், திருமணம் நடந்தது. இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.
திருமணமான ஒரே மாதத்தில், புதுமண தம்பதிக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. நந்தினியின் மாமா சம்பங்கி, அம்பரிஷை அடித்து உள்ளார். இது குறித்து, அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்தில், அம்பரிஷ் புகார் அளித்துள்ளார்.
புகாரில் 'என் மனைவியும், அவரது குடும்பத்தினரும் என்னிடம் சண்டை போட்டனர். என் மொபைல் போன், தங்கச்செயின், மோதிரத்தையும், 15,000 ரூபாயையும் பறித்து கொண்டதுடன், நான்கு லட்சம் ரூபாய் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர்' என குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று, மனைவி நந்தினியும் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதில் 'எங்களின் திருமணத்துக்கு முன், கணவர் அம்பரிஷுக்கு வேறு பெண்ணுடன் காதல் இருந்தது. திருமணத்துக்கு பின்னரும், அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். என்னை மனரீதியாக, உடல் ரீதியாக கொடுமைப்படுத்தினார். தினமும் குடித்து விட்டு வந்து, என்னை அடித்தார். இதற்கு என் மாமியாரும் உடந்தையாக இருக்கிறார். திருமண நிச்சயதார்த்தத்தில் நான் அணிந்திருந்த பட்டுச்சேலையை, என் மாமியாரே இஸ்திரி போட்டு, மகனின் காதலிக்கு பரிசளித்துள்ளார். ஜாதி பெயரை சொல்லி திட்டுகின்றனர்' என குறிப்பிட்டுள்ளார்.
இருவரின் புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

