600 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி ஓட்டுநர் உயிர் தப்பிய அதிசயம்
600 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி ஓட்டுநர் உயிர் தப்பிய அதிசயம்
ADDED : மார் 14, 2026 06:42 AM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில், 600 அடி பள்ளத்தில் விழுந்து லாரி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார்.
தொட்டபல்லாபூரில் இருந்து சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில் உள்ள ஹிரேபைலு கிராமத்துக்கு சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற, 12 சக்கர லாரி, நேற்று காலை முடிகெரேயின் கெலேகுரு டீ எஸ்டேட் அருகே செல்லும் போது, ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய லாரி, சாலை தடுப்பை உடைத்து கொண்டு 600 அடி பள்ளத்தில் உருண்டது.
உருண்ட லாரி, டீ எஸ்டேட் ஊழியர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அருகே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக லாரி வீடுகளின் மீது விழவில்லை. அவ்வாறு விழுந்திருந்தால், பலர் உயிரிழந்திருப்பர். விபத்தில் லாரி ஓட்டுநர் அமர்ந்திருக்கும் பகுதி முழுதும் உருக்குலைந்து, ஓட்டுநர் சிக்கிக் கொண்டார். லாரி கவிழ்ந்த இடத்துக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை.
இதனால், தார்சாலை போடும் இயந்திரம் மூலம் தற்காலிக சாலை அமைத்து, லாரியை அப்புறப்படுத்தினர். இரண்டு மணி நேரம் முயற்சிக்கு பின், ஓட்டுநர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அதிவேகத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
