அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் சாலையை சரிசெய்த தொழிலாளி
அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் சாலையை சரிசெய்த தொழிலாளி
ADDED : ஜூலை 25, 2026 12:28 AM

சாம்ராஜ்நகர்: பொது மக்கள் நடமாடும் சாலையை சரி செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால், கூலி தொழிலாளி ஒருவர், தன் சொந்த செலவில் சாலையை சரி செய்தார்.
சாம்ராஜ் நகரில் இருந்து, குண்டுலுபேட் தாலுகாவுக்கு இணைப்பு ஏற்படுத்தும், பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பல முறை விபத்துகளும் நடந்தன. மழை பெய்தால், சாலை முழுதும் ஏரி போல மாறி விடுவது வழக்கம்.
இந்த சாலையில் செல்லும் பள்ளி சிறார்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் செல்ல முடியாமல், பாதிப்பு ஏற்பட்டது. இதே பாதையில் தினமும் பயணிக்கும் கூலி தொழிலாளி ஷபிவுல்லா என்பவர், பொதுமக்கள் படும் அவதியை கண்டு மனம் வருந்தினார். சாலையை சரி செய்யும்படி அதிகாரிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். நேரில் சந்தித்து கோரியும் பயனில்லை.
அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியத்தால், வெறுப்படைந்த ஷபிவுல்லா, கூலி வேலை செய்து சேமித்து வைத்திருந்த தன் சொந்த பணத்தை செலவிட்டு, சாலையை சரி செய்தார்.
இதை கண்டு பலரும் பாராட்டினர். 'மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதில், அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை. ஒரு சாதாரண கூலி தொழிலாளி, தன் சொந்த பணத்தை செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
'இது அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்' என, பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
