ரூ.6 லட்சத்துடன் விதான் சவுதாவுக்குள் செல்ல அடம் பிடித்த வாலிபர்
ரூ.6 லட்சத்துடன் விதான் சவுதாவுக்குள் செல்ல அடம் பிடித்த வாலிபர்
ADDED : மார் 26, 2026 12:48 AM
பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில் சட்டசபை கூட் டத்தொடர் நடப்பதை ஒட்டி, நுழைவாயில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை மேற்கு நுழைவாயில் பகுதியில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒரு வாலிபர் தோளில் பை அணிந்தபடி வந்தார்.
பையை திறந்து சோதனை செய்த போது, கட்டு, கட்டாக 6 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. பணத்துடன், விதான் சவுதாவுக்குள் செல்ல அனுமதி இல்லை என்று கூறிய போதும், நான் உள்ளே செல்வேன் என்று அடம் பிடித்தார். இதனால் அவரை விதான் சவுதா போலீசார் நிலையத்திற்கு அழைத்து சென்று, உதவி கமிஷனர் கிருஷ்ணய்யா விசாரித்தார்.
அந்த வாலிபர், விஜயபுராவின் இண்டியை சேர்ந்தவர் என்பதும், இண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த் ராயகவுடா பாட்டீலை சந்திக்க வந்ததும் தெரிந்தது. பணம் குறித்து கேட்ட போது, மருத்துவமனையில் தனது தாத்தா சிகிச்சை பெறுவதாகவும், கட்டணம் செலுத்த பணத்தை கொண்டு வந்ததாகவும் கூறினார். ஆனாலும், அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் எடுத்த வந்த பையில் நகை, பணம் இருந்தது. அந்த பையை திருடியதாக, குரூப் டி ஊழியர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
