தொண்டையில் கோழி எலும்பு சிக்கியதால் வாலிபர் உயிரிழப்பு
தொண்டையில் கோழி எலும்பு சிக்கியதால் வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஏப் 18, 2026 11:40 PM
ஷிவமொக்கா: பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்று, கறி விருந்து சாப்பிட்ட வாலிபர், தொண்டையில் கோழி எலும்பு சிக்கியதால் உயிரிழந்தார்.
ஷிவமொக்கா மாவட்டத்தின் கும்சி அருகேயுள்ள சென்னஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சச்சின், 21. அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு, ஏப்ரல், 17ம் தேதியன்று பிறந்த நாள். அதனால், கிராமத்தின் புறநகரில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், அவர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பார்ட்டியில் பங்கேற்கும்படி, நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். சச்சினும் பங்கேற்றிருந்தார். அன்றிரவு கறி விருந்து வழங்கப்பட்டது. உணவு முடிந்த பின், அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றனர்.
கட்டட பணியாளர்கள், நேற்று முன்தினம் காலை, கட்டடத்துக்கு வந்த போது, அங்கு சச்சின் மயக்கம் அடைந்து கிடந்தது தெரிந்தது. உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு, தகவல் கொடுத்தனர். அங்கு வந்த குடும்பத்தினர், சச்சினை ஷிவமொக்கா கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கும்சி போலீசார், சச்சினின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். நேற்று அறிக்கை வந்துள்ளது. பார்ட்டியில் மதுபானம் அருந்திய சச்சின், சாப்பிடும் போது கோழி எலும்பு தொண்டையில் சிக்கியதே, அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
கும்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
