திருமணம் செய்ய காதலி மறுத்ததால் ஆத்திரம் மின் கோபுரத்தில் வாலிபர் தற்கொலை மிரட்டல்
திருமணம் செய்ய காதலி மறுத்ததால் ஆத்திரம் மின் கோபுரத்தில் வாலிபர் தற்கொலை மிரட்டல்
ADDED : மே 20, 2026 11:56 PM

ஆனேக்கல்: திருமணம் செய்ய காதலி மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர், உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி, தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். அவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பெங்களூரு ரூரல் ஆனேக்கல் தாலுகா சின்னய்யனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் சோமசேகர், 26. இவரும், 24 வயது இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்தனர்.
குடி, போதை பழக்கத்திற்கு சோமசேகர் அடிமையானதால் அவருடன் பேசுவதை காதலி தவிர்த்தார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் காதலியை சந்தித்த சோமசேகர், திருமணம் பற்றி பேசி உள்ளார். உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறி காதலி மறுத்தார்.
இதனால், கோபமடைந்த அவர், அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி நின்றபடி, தற்கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், ஆனேக்கல் போலீசார், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார், சோமசேகரிடம் பேச்சு நடத்தினர். கீழே இறங்கும்படி கூறினர்.
இதை கேட்க மறுத்த சோமசேகர், 'என் காதலி இங்கு வர வேண்டும்; என்னை திருமணம் செய்வதாக அவர் சொல்ல வேண்டும்; அப்போது தான் கீழே இறங்குவேன். இல்லாவிட்டால் இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டினார்.
இதையடுத்து, மின் கோபுரத்திற்கு சென்ற மின் இணைப்பை துண்டித்த மின் துறை ஊழியர்கள் மூலம் போலீசார் துண்டித்தனர். கயிறு கட்டிய படி, தீயணைப்பு படை வீரர்கள் இருவர் மின் கோபுரத்தில் ஏறினர்.
சோமசேகரிடம் பேச்சு நடத்தி, அவரை கீழே அழைத்து வந்தனர். கீழே இறங்கியதும் அவருக்கு போலீசார், கிராம மக்கள் புத்திமதி கூறினர். 'இனி, இதுபோல செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
