/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மோசமான சாலையால் விபத்து: ஆண் குழந்தை உட்பட இருவர் பலி
/
மோசமான சாலையால் விபத்து: ஆண் குழந்தை உட்பட இருவர் பலி
மோசமான சாலையால் விபத்து: ஆண் குழந்தை உட்பட இருவர் பலி
மோசமான சாலையால் விபத்து: ஆண் குழந்தை உட்பட இருவர் பலி
ADDED : பிப் 17, 2026 05:44 AM

பெங்களூரு: பெங்களூரில் மோசமான சாலையில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில், 2 வயது ஆண் குழந்தை உட்பட இருவர் இறந்தனர்.
பெங்களூரு எலஹங்காவில் வசிப்பவர் ஹரிஷ். இவரது மகன் திரிஷான், 2. மஹாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஹரிஷ், தனது மகனுடன், கே.ஆர்.புரத்தில் வசிக்கும் உறவினர் விஜயலட்சுமி வீட்டிற்கு சென்றார். திரிஷானை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு, மாரகொண்டனஹள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு விஜயலட்சுமி சென்றார்.
ஹலேஹள்ளி சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார் ஸ்கூட்டர் மீது மோதியது. ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த, திரிஷான் மீது கார் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்நிலையில், நேற்று காலை திரிஷான் உறவினர்கள் மற்றும் ஹலேஹள்ளி சாலையில் வசிக்கும் பொதுமக்கள், ஹலேஹள்ளி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு மாதமாக சாலை பணிகள் இங்கு மந்தகதியில் நடக்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதுவரை ஐந்து பேர் இறந்து உள்ளனர். ஆனாலும், யாரும் கண்டுகொள்வது இல்லை என்று கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.
ஆடுகோடியில் வசித்தவர் அமலா, 49. நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டரில் சென்றார். அந்த வழியாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. சாலையில் தவறி விழுந்த அவர் மீது, லாரியின் சக்கரம் ஏறியதில் இரண்டு கால்களும் உடைந்தன.
உயிருக்கு போராடிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார். இந்த விபத்துக்கும் சாலை பள்ளமே காரணம் என்று, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

