சிறுபான்மையினர் தலைவர்கள் மீதான நடவடிக்கை சரியே: காங்., - எம்.பி., பிரபா
சிறுபான்மையினர் தலைவர்கள் மீதான நடவடிக்கை சரியே: காங்., - எம்.பி., பிரபா
ADDED : ஏப் 22, 2026 01:48 AM

தாவணகெரே: ''தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக சிறுபான்மை தலைவர்கள் செயல்பட்டதால், அவர்கள் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியே,'' என தாவணகெரே காங்., - எம்.பி., பிரபா தெரிவித்தார்.
தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஒரு ஒழுக்கமான கட்சி. தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில், கட்சிக்கு எதிராக சிறுபான்மை தலைவர்கள் செயல்பட்டதால், அவர்கள் மீது கட்சி எடுத்த நடவடிக்கை சரியே.
அப்போது குறுக்கிட்ட ஊடகத்தினர், 'கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் ராகவேந்திரா வெற்றி பெற வேண்டும்' என்று ஷாமனுார் சிவசங்கரப்பா அழைப்பு விடுத்தார். அப்போது கட்சி ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை' என்றனர்.
(இதை கேட்ட அவர், குழப்பமடைந்தார். பின், சுதாரித்து கொண்டு அதற்கான பதிலை கூறாமல்), இண்டி கூட்டணி, பெண்கள் விரோத அமைப்பாக சித்தரிக்க, நாட்டில் சதி நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தல்களை முன்னிட்டு, மகளிர் இடஒதுக்கீடு பிரச்னை அவசர அவசரமாக கொண்டு வந்தனர். இந்த பிரச்னையின் அடிப்படையில், பெண்களுக்கு விரோதிகளாக காங்கிரஸ் சித்தரிக்கப்படுகிறது.
தொகுதி மறுவரையறையால் இண்டி கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. வட மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். அதனால் தான், நாங்கள் அதை எதிர்த்தோம்.
பெண்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துவதையும், உணர்ச்சிபூர்வமான வேண்டுகோள்களை விடுப்பதையும் நிறுத்த வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, அதன் பெருமையை தனதாக்கி கொள்வதே தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
