பரப்பன அக்ரஹாரா சிறையில் பயோமெட்ரிக் கைதிகள் செயல்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
பரப்பன அக்ரஹாரா சிறையில் பயோமெட்ரிக் கைதிகள் செயல்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
ADDED : மே 10, 2026 12:00 AM

பெங்களூரு: சிறையில் கைதிகள் விதி மீறலாக நடந்து கொள்வதை கட்டுப்படுத்தும் நோக்கில், பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கைதிகளுக்கு, 'பயோமெட்ரிக்' நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
பெ ங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, அவ்வப்போது விவாதங்களில் சிக்குகிறது. கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது, கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
கைதிகளுக்கு இடையே அடிதடி சம்பவங்களும் நடந்துள்ளன. சிறையில் கைதிகளுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. வி.ஐ.பி.,க்கள் போன்று வாழ்கின்றனர் என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.
உயர் அதிகாரிகள் அவ்வப்போது, சிறையில் திடீர் சோதனை நடத்துகின்றனர். ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், மொபைல் போன், போதைப்பொருள், சிம் கார்டுகள், கத்தி உட்பட தடை செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள், கைதிகளிடம் கண்டுபிடிக்கப்படுகின்றன.
சிறையில் இருந்து கொண்டே, தங்களின் கூட்டாளிகள் மூலம், தொழிலதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை, நாச வேலைகளுக்கு சதித்திட்டம் தீட்டிய உதாரணங்களும் உள்ளன.
இத்தகைய சம்பவங்களால், உயர் அதிகாரிகள் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். கைதிகளிடம் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கில் சிறைத்துறை அதிகாரிகள், பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகளுக்கு 'பயோமெட்ரிக்' நடைமுறை கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
சிறையில் கைதிகளின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த, 'பிரனர்ஸ் டிராக்கிங் மூவ்மென்ட் சிஸ்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு சிறை பேரக்கில் நுழையும் போது, கைதிகள் பயோ மெட்ரிக் பதிவு செய்வது கட்டாயம்.
ஏ.ஐ., தொழில் நுட்பம்
ஏற்கனவே, சிறையில் ஏ.ஐ., தொழில் நுட்பம் கொண்ட கேமராக்கள் மூலம், கைதிகள், அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். தற்போது பயோமெட்ரிக் நடைமுறையை செயல்படுத்தி உுள்ளோம். தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் தனித்தனி பேரக்கில் இருந்தாலும், உணவருந்தும் போது, சிகிச்சை பெறும் போது ஒரே இடத்தில் சேருகின்றனர். இவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டு, சிறைக்குள்ளும், வெளியிலும் மறைமுகமாக குற்றங்களுக்கு காரணமாகின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
சிறையின் ஒவ்வொரு அறை, சந்திப்பாளர்கள் அறை, மருத்துவமனை உணவகம், சமையல் அறை, நுாலகம், மைதானம், கைவினை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், பேக்கரி உட்பட, அனைத்து இடங்களிலும், பயோமெட்ரிக் வசதி செய்யப் பட்டுள்ளது.
சந்திப்பாளர்களின் அறைக்கு செல்லும் போது, பயோமெட்ரிக் செய்வதுடன் டோக்கன் பெற வேண்டும். இந்த டோக்கன்களில் கைதியின் பெயர், எண், சந்திப்பு நேரம் என, அனைத்து தகவல்களையும், சிறை ஊழியர் சாப்ட்வே ரில் அப்டேட் செய்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
