ADDED : மே 18, 2026 11:19 PM

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் உள்ள, நடிகர் தர்ஷன் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலை, சிறை நிர்வாகம் மறுத்து உள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடிகர் தர்ஷன் அடைக்கப்பட்டு உள்ளார். இன்று அவருக்கு திருமண நாள். மனைவி விஜயலட்சுமி, மகன் வினிஷ் ஆகியோரை நேருக்கு நேர் பார்த்து பேச ஆசைப்படும் அவர், இதற்கு அனுமதி கேட்டு சிறை துறை கண்காணிப்பாளர் அன்சுகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
'இந்த கடிதத்தின் மீது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என, சிறை துறை டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று கூறி இருந்தார்.
இந்நிலையில், சிறையில் மன அழுத்தத்தால் தர்ஷன் அவதிப்பட்டதாகவும், மன அழுத்தத்தை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும், சில சமூக ஊடகங்களில் நேற்று மதியத்திற்கு மேல் தகவல் பரவியது. இது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
ஆனால் இதில் துளி கூட உண்மை இல்லை என்று சிறை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். 'இதுபோன்ற வதந்தியை நம்பி யாரும் சிறை பக்கம் வரக்கூடாது' என்று, அலோக் குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன், மைசூரை சேர்ந்த மனநல டாக்டர் அபிஜித், தர்ஷனுக்கு மனநல சிகிச்சை தேவை. அவர் தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
