ADDED : மே 14, 2026 12:14 AM

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் திலீப் ராஜ், மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம், திரைத்துறையினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின், மிலனா படத்தில் நடித்ததன் மூலம் திலீப்ராஜ், 47, கன்னட திரையுலகில் பிரபலமானார். யு டர்ன், பாய்பிரண்ட் போன்ற படங்கள் இவருக்கு புகழை தேடி தந்தன.
கடந்த மே மாதம், 'டி.ஆர்., கிரியேஷன்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்.
இந்த தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் 'டிவி' சீரியல்களை தயாரித்து வந்தார். பிரபல தனியார் தொலைக்காட்சியில், 'ஹிட்லர் கல்யாணா' எனும் சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதன் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். மேலும், 'டப்பிங் ஆர்டிஸ்ட்'டாகவும் செயல்பட்டு வந்தார். இப்படி வெள்ளித்திரை, சின்னத்திரையிலும் முத்திரை பதித்த அவர், 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.
இவர், பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக குமாரசாமி லே - அவுட்டில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்துக்கு திரைத்துறையினர், சீரியல் நடிகர், நடிகைகள் என பலரும் வருத்தம் தெரிவித்தனர். இறுதி சடங்குகள், திலீப்பின் சொந்த ஊரான ராம்நகரில் நடந்தது.
