ஏ.ஐ., வீடியோ, போட்டோக்களால் நடிகை ருக்மிணி வசந்த் தர்மசங்கடம்
ஏ.ஐ., வீடியோ, போட்டோக்களால் நடிகை ருக்மிணி வசந்த் தர்மசங்கடம்
ADDED : மே 24, 2026 02:28 AM

பெங்களூரு: ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்படுத்தி, தன்னை பற்றி போலியாக உருவாக்கப்பட்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை மர்ம நபர்கள் வெளியிடுவதால், நடிகை ருக்மணி வசந்த் தர்ம சங்கடத்தில் உள்ளார். இது குறித்து, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
சமீப நாட்களாக, அனைத்து துறையிலும் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.
இதில் நன்மைகள் உள்ளன என்றாலும், சில சமூக விரோதிகள் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன் படுத்தி, மற்றவருக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
குறிப்பாக, நடிகையரின் போலியான போட்டோக்கள், வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்புகின்றனர்.
கன்னடம் உட்பட பன்மொழிகளில் நடிப்பவர் ருக்மிணி வசந்த். இவர் பச்சை நிறத்தில் ஆபாச உடை, நீச்சல் உடை அணிந்திருப்பதை போல, ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலமாக, போலியான போட்டோக்கள், வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த படம், சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதை நண்பர்கள், அவரது கவனத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து, அவர் போலீசாரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.
ருக்மிணி வசந்த் கூறியதாவது:
சமூக வலை தளத்தில் பரவியுள்ள போட்டோக்கள், வீடியோக்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை முற்றிலும் போலியானவை. ஏ.ஐ., தொழில்நுட்பம் மூலமாக, 'மார்பிங்' செய்யப்பட்டுள்ளன. இதை யாரும் நம்ப வேண்டாம்.
என்னை ஆபாசமாக சித்தரித்து, என் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். வேடிக்கை என்ற பெயரில், இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது கட்டாயம்.
இது குறித்து, ஏற்கனவே பெங்களூரின் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளேன். போலீசாரும் விசாரணையை துவக்கியுள்ளனர்.
போலியான போட்டோக்கள், வீடியோக்கள் உருவாக்கி, சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மட்டுமின்றி, அவற்றை மற்றவருக்கு 'ஷேர்' செய்வோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியான வீடியோக்கள், போட்டோக்கள் தயாரிப்பதை, யாரும் ஊக்கப்படுத்த கூடாது. அவற்றை, ஷேர் செய்யாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
