ADDED : செப் 02, 2026 11:59 PM
பெங்களூரு: பெங்களூரில் ஐந்து நாட்கள் நடக்கும் விமான கண்காட்சி, அடுத்த ஆண்டு, பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது.
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை விமான கண்காட்சி நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியில் நம் நாட்டில் தயாரிக்கப்படும் போர் விமானங்கள், வெளிநாட்டு போர் விமானங்களின் அணிவகுப்பு நடக்கும். இது காண்போரை கவரும் வகையில் இருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கண்காட்சி நடந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான தேதியை பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
பிப்ரவரி 8 ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாட்கள் நடத்தப்படுகிறது.
இந்த கண்காட்சியில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, இந்த முறை உலகளாவிய கூட்டாண்மைகள், பாதுகாப்பு ஏற்றுமதிகள், முதலீட்டு விரிவாக்கம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
கண்காட்சியில் ஸ்டால்கள் வைப்போர், பார்வையாளராக வருவோர் www.aeroindia.gov.in என்ற இணைய முகவரியில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். இன்று முதல் இணைய முகவரி செயல்பட துவங்கும்.
