தெரிந்த ஹோட்டல் உரிமையாளர்களாக இருந்தாலும் பாரபட்சம் கிடையாது: காதர்
தெரிந்த ஹோட்டல் உரிமையாளர்களாக இருந்தாலும் பாரபட்சம் கிடையாது: காதர்
ADDED : செப் 02, 2026 11:07 PM

மங்களூரு: ''உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் சிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் காண்பிக்க மாட்டேன்,'' என, சுகாதார அமைச்சர் காதர் கண்டிப்புடன் கூறி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
உணவு பாதுகாப்பு விதிகளை ஹோட்டல்கள், பி.ஜி., எனும் தங்கும் விடுதிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரில் உள்ள சுவீட் கடைகள், ஹோட்டல்களில் சோதனை தொடர்ந்து சோதனை நடக்கிறது. இது போன்று மங்களூரு, உடுப்பி, ஹூப்பள்ளி, பெலகாவி, மைசூரு போன்ற இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இச்சோதனைகளின் போது சிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள், எனக்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சம் காண்பிக்க மாட்டேன். விதிகளை மீறுவோருக்கு நிச்சயம் உதவ மாட்டேன்.
இதுபோன்ற சோதனைகள், ஹோட்டல் உரிமையாளர்களை பயமுறுத்துவதற்காக நடப்பதில்லை. மாறாக, வாடிக்கை யாளர்களை ஹோட்டல்கள் ஏமாற்றக்கூடாது. மக்களின் உடல் நலத்தில் யாரும் விளையாடக்கூடாது. சுகாதாரம், மக்கள் நலனில் சமரசமில்லை.
ஹோட்டல்களில் கியு.ஆர்., குறியீடுகள் ஒட்டப்படும். உணவுகளில் ஏதேனும் குறையிருந்தால் கியு.ஆர்., குறியீடுகளை ஸ்கேன் செய்து புகார் அளிக்கலாம். பி.ஜி.,யில் தங்குவோருக்கு துாய்மையான, சுவையான, சத்தான உணவை வழங்க வேண்டும். இதில், பி.ஜி., உரிமையாளர்கள் அக்கறை செலுத்துவது அவசியம்.
அடுத்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவுடன், சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் வெற்றி பெறும். 2028ல் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
