ADDED : ஆக 23, 2026 11:04 PM

- நமது நிருபர் -:
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் ராஜாராம் - சுலதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. இவருக்கு விமானியாக வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்தது. இதற்கு அவரது அண்ணன் ஆசிப் விமானியாக இருப்பதே காரணம். இதனால், இவரும் விமானியாக வேண்டும் என தீர்மானித்தார். இவர் தனது பள்ளி படிப்பை, மங்களூரிலே முடித்தார். பின், மத்திய பிரதேசத்தில் உள்ள விமானி பயிற்சி அகாடமியில் சேர்ந்தார். அங்கு அனைத்து நுட்பங்களையும் சிறப்பாக கற்றுக்கொண்டார். பயிற்சி படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
பின், தாய்லாந்து நாட்டில் வர்த்தக விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளால், 180 பயணியர் பயணம் செய்யக்கூடிய ஏ - 320 விமானங்களையும் இயக்க கற்றுக்கொண்டார். இதன் மூலம் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான உரிமத்தை சமீபத்தில் பெற்றுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: இது எனது பல நாள் கனவு. இதற்காக, பல நாட்கள் கஷ்டப்பட்டு உள்ளேன். இரவு, பகலாக உழைத்து உள்ளேன். வர்த்தக விமானி உரிமம் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் சாப்பாடு போன்ற சில சிரமங்களை தாங்கிக்கொண்டேன். பிடித்ததற்காக உழைப்பதில் சுகம் அதிகம் என்பதை தெரிந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
