ADDED : ஏப் 13, 2025 08:33 AM

பெங்களூரு: வங்கிகள் வாராக்கடன் பிரச்னையை தீர்ப்பது குறித்து பேபால் நிறுவன இயக்குநர் அமான் நுாருல்லா தீர்வு கூறி உள்ளார்.
வங்கிகளின் கடன் நிலுவை - வாராக்கடன் பிரச்னை தொடர்பான நவீன தொழில்நுட்ப கருத்தரங்கு, பெங்களூரில் தனியார் ஹோட்டலில் நேற்று முன் தினம் நடந்தது.
கருத்தரங்கில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பேபால் நிறுவன இயக்குநர் அமான் நுாருல்லா பேசியதாவது:
வங்கிகளின் கடன் நிலுவை, வாராக்கடன் பிரச்னையால் நாட்டின் பொருளாதாரம் பலவீனம் அடையும். இதை தவிர்ப்பது அவசியம். கடன் வழங்கும் நடைமுறையை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற்ற வேண்டும்.
கடன் வாங்குவோரின் வருமானம், வங்கி பரிவர்த்தனை ஆய்வு செய்து கடன் வழங்குவது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
நிலுவை கடன் வசூலிக்க அதிகாரிகள் நியமிப்பதை தவிர்த்து, டிஜிட்டல் தொழில்நுட்பம் வழியாக வசூலிக்க நடவடிக்கை வேண்டும். கடன் கேட்போரின் முந்தைய பரிவர்த்தனை சார்ந்த நிலுவை குறித்து, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தகவலை திரட்டி, அதற்கு ஏற்ப முடிவு எடுக்கப்பட வேண்டும்.
வங்கி கடன் வழங்கல், வசூலிப்பில் நவீன நடைமுறையை புகுத்த, ரிசர்வ் வங்கி அவசர ஆலோசனை குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரசன்ன நிர்மல்குமார், பினாக்கி மிஸ்ரா பேசினர். சவுத் இந்தியன் வங்கி அதிகாரி வினோத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
