போக்சோ வழக்கில் மடாதிபதியிடம் 'கிடுக்கி' ஆண்மை பரிசோதனையால் பரபரப்பு
போக்சோ வழக்கில் மடாதிபதியிடம் 'கிடுக்கி' ஆண்மை பரிசோதனையால் பரபரப்பு
ADDED : மே 15, 2026 03:40 AM

தாவணகெரே: 'போக்சோ' வழக்கில் சிக்கியுள்ள மடாதிபதி வசனானந்தநாத சுவாமியிடம், போலீசார் நான்கு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆண்மை பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளார்.
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் வசனானந்தநாத சுவாமி. இவர், ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக, மடத்தின் அறக்கட்டளையினர் குற்றம் சாட்டினர். மடத்தின் இருந்து, வசனானந்தநாத சுவாமியை வெளியேற்றினர்.
இதற்கிடையே, மடத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளியில் படித்த, கதக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவனிடம், மடாதிபதி தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிறுவனின் தாய், கதக் லட்சுமேஸ்வர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக வழக்கு பதிவானது. அந்த வழக்கு ஹரிஹரா போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, வசனானந்தநாத சுவாமி முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அவருக்கு முன்ஜாமின் வழங்கி, கடந்த 2ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், ஹரிஹரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 10:00 மணிக்கு, விசாரணைக்கு ஆஜராக மடாதிபதி சென்றார். அவரிடம் நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஹரிஹரா அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது ரத்தம், தலைமுடி சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப, போலீசார் தயாராகி உள்ளனர். விசாரணை, மருத்துவ பரிசோதனைக்கு பின், மடாதிபதி அனுப்பி வைக்கப்பட்டார். நோட்டீஸ் அனுப்பும் போது தவறாமல் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மடாதிபதிக்கு ஆண்மை பரிசோதனை நடத்திய டாக்டர் கூறுகையில், 'இந்த வழக்கு 2021ல் நடந்தது என்பதால், மடாதிபதிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ் ஆக வருவதற்கு வாய்ப்புகள் குறைவு' என தெரிவித்து உள்ளார்.
எனினும், ''எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது,'' என, மடாதிபதி கூறி உள்ளார்.
