ADDED : ஆக 28, 2026 11:25 PM
கலபுரகி: மனைவி மீதான கோபத்தில், தன் நான்கு வயது மகனை அணையில் வீசி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
கலபுரகி மாவட்டம், சிஞ்சோளி தாலுகாவின், ஹசரகுன்டகி கிராமத்தில் வசிக்கும் மடிவாளப்பாஹூகார் மற்றும் கருணாதேவி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மகள் கல்பனாவை, சோமராவ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கணவருடன் தோடிகோளா கிராமத்தில் கல்பனா வசித்தார். தம்பதிக்கு குண்டேஷ், 4, என்ற மகன் உள்ளார்.
சமிப நாட்களாக குடும்ப பிரச்னையால், தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
தினமும் ஏதாவது காரணத்தை வைத்து, மனைவியுடன் சோமராவ் தகராறு செய்தார்.அடித்து கொடுமைப்படுத்தினார். கணவரின் செயலால் வெறுப்படைந்த கல்பனா, மகனை அழைத்து கொண்டு, தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன், சோமராவ் மனைவியின் வீட்டுக்கு வந்தார். அனைவரிடமும் நல்ல முறையில் நடந்து கொண்டார். தன் மகன் குண்டேஷுடன், மகிழ்ச்சியாக விளையாடினார். அனைவரும் சோமராவை நம்பினர்.
யாரிடமும் கூறாமல் மகனை வெளியே, அழைத்து சென்றார். கிராமத்தின் அருகில் உள்ள நாகராளா அணையில், மகனை வீசி கொலை செய்தார்.
மகனை காணாமல் கல்பனா தேடிய போது, கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிஞ்சோளி நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தார்.
போலீசார் சோமராவை தீவிரமாக விசாரித்த போது, மகனை அணையில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தீயணைப்பு படையினர் உதவியுடன் அணையில் தேடிய போது, சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சோமராவை கைது செய்தனர்.
