சனிக்கிழமை மட்டும் திறந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில்
சனிக்கிழமை மட்டும் திறந்திருக்கும் ஆஞ்சநேயர் கோவில்
ADDED : மே 25, 2026 10:25 PM

- நமது நிருபர் -: பெங்களூரில் இருந்து 35 கி.மீ., தொலைவில் கனகபுரா சாலையில் நெட்டிகெரே கிராமத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது குண்டு ஆஞ்சநேய சுவாமி கோவில்.
ராமாயணம் காலத்தில் இவ்வழியாக வந்த ஸ்ரீராமர், ஓய்வு வெடுத்ததாக கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் பீமன் இம்மலையில் இருந்து எய்த அம்பு, நந்தி மலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை குடைவரை கோவில் என்றும் அழைக்கின்றனர்.
இக்கோவில் சனிக்கிழமை, விசேஷ நாட்களில் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அது தவிர, தினமும் இரவு நேரத்தில் கோவிலில் கட்டப்பட்ட மணிகள் தானாக ஒலிக்க ஆரம்பிக்குமாம். இந்த மணியை, ஹனுமனே அடிப்பதாக நம்பப்படுகிறது.
சிறிய மலை என்பதால், முதிய பக்தர்கள் உட்பட பலரும் ஏறும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அது தவிர, இரு சக்கர வாகனம், கார்களில் வந்தால், வாகனங்களை மலையின் மீது நிறுத்தவும் வசதி உள்ளது.
இது தவிர, சில குடும்பத்தினர், ஹனுமனை தங்கள் குல தெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர். விசேஷ நாட்களில் இங்கு வந்து கோவில் அருகில் கட்டப்பட்டு உள்ள வளாகத்தில் பிரசாதங்களை அவர்களே தயாரித்து, சுவாமிக்கு படைப்பர். பின், அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு புறப்படுவர்.
மலை மீது கோவில் அருகில் இவ்வளவு பெரிய தெப்பகுளத்தை வேறு எங்கு பார்த்திருக்க மாட்டீர்கள். அது தவிர, தெப்பகுளம் சுற்றிலும் சுத்தமாகவும், தண்ணீர் துாய்மையாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மழை காலத்தில் பாறைகளில் இருந்து தானாகவே நீரூற்றுகள் தோன்றி மலை முழுதும் ஓடும். அத்துடன் மலையில் சிறிய திறந்தவெளி மண்டபம் உள்ளது. அங்கு பீமனின் கால்பாதம் அச்சு உள்ளது. இதை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.
