ADDED : மே 25, 2026 10:23 PM

- நமது நிருபர் -
மாண்டியாவின் கே.எம்.தொட்டி ஹனுமந்த நகரில் ஆத்ம லிங்கேஸ்வரா கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோவிலுக்கும், ராமாயண காலத்திற்கும் இடையில் தொடர்பு உள்ளது. இலங்கையின் அரசன் ராவணன், தீவிர சிவன் பக்தர். தனது தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிவன் பாதத்தில் விழுந்து வழிபட்ட இடத்தில் சிவலிங்கத்தை நிறுவினார்.
அந்த இடத்தில் தான் தற்போது ஆத்ம லிங்கேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. கோவில் மலை மீது இருப்பதால் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டும். செல்லும் வழியிலேயே ஆஞ்சநேயர், பசவண்ணர் சிலைகள் உள்ளன.
கோவில் வளாகத்தில் விநாயகர், ஹனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும் அமைந்து உள்ளன. சிவலிங்கத்தை தரிசித்த பின், கோவில் வளாகத்தில் உள்ள சிறிய குளத்தின் நடுப்பகுதியில், மலையை கையில் துாக்கி செல்லும் ஹனுமன் சிலையை பார்த்து ரசிக்கலாம். இச்சிலை பக்தர்களை வெகுவாக கவர்கிறது.
கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில், சிறிய தோட்டங்களும் உள்ளன. குளத்தில் படகு சவாரியும் உள்ளது. குடும்பத்தினருடன் செல்வோர் சாமி தரிசனம் முடிந்ததும், தோட்ட பகுதியில் அமர்ந்து நேரத்தை செலவழிக்கலாம். கோவில் அருகில் மைதானமும் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். கோவிலின் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்து இருக்கும்.
