மலை மஹாதேஸ்வரா மலையில் மற்றொரு சிறுத்தையால் அச்சம்
மலை மஹாதேஸ்வரா மலையில் மற்றொரு சிறுத்தையால் அச்சம்
ADDED : மே 25, 2026 10:28 PM

சாம்ராஜ்நகர்: மலை மஹாதேஸ்வரா மலையில், ஒரு சிறுத்தை பிடிபட்டதால், மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், மற்றொரு சிறுத்தை நுழைந்து ஆட்டை கொன்று தின்றுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுாரின், மலை மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை நொத்தரவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கிராமத்தினருக்கும், பக்தர்களுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது. கடந்த மாதம் ஒரு இளைஞர், இரண்டு வாரங்களுக்கு முன், பெங்களூரை சேர்ந்த 8 வயது சிறுவன், சிறுத்தைக்கு பலியாகினர்.
இதன் விளைவாக மலை மஹாதேஸ்வரா மற்றும் அதன் அருகில் உள்ள நாகமலைக்கு பாதயாத்திரை செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். இன்டிகநத்தா உட்பட, நான்கு இடங்களில் கூண்டு வைத்திருந்தனர். இன்டிகநத்தா கிராமம் அருகில் வைத்திருந்த கூண்டில், நேற்று முன்தினம் பெண் சிறுத்தை சிக்கியது. இதனால் பக்தர்களும், கிராமத்தினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, மலை மஹாதேஸ்வரா மலை அருகில் உள்ள நாகமலை கிராமத்தில் சிறுத்தை புகுந்தது. வீட்டு முன்பாக இருந்த ஆட்டை கொன்று தின்றுள்ளது. இன்டிகநத்தா கிராமத்தில் இருந்து, வெறும் மூன்று கி.மீ., தொலைவில், நாகமலை கிராமம் உள்ளது. இங்கு சிறுத்தை நடமாடுவதால், கிராமத்தினர் கிலி அடைந்துள்ளனர். இதை பிடிக்கும்படி வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பிடிபட்ட சிறுத்தை, சிறுவனை கொன்றதா இல்லை. இது வேறா என, வனத்துறையினர் குழப்பத்தில் இருந்தனர்.
