ADDED : ஜூன் 06, 2026 11:32 PM

பெங்களூரு: 'மாநிலம் முழுதும் ரவுடிகள் ஒழிப்பு படையை அமைக்க வேண்டும்' என, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், மாநில டி.ஜி.பி., சலீம், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஜனநாயக சமுதாயத்தில், சட்டம் -- ஒழுங்கை காக்கவும், குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அமைதியான சூழலை உறுதி செய்யவும் ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்துவது அவசியம்.
ரவுடிகளின் செ யல்பாடு, பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம். சமுகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையால், பொது மக்கள் அச்சமின்றி நடமாட உதவும்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. ரவுடிகளின் செயல்பாடுகளை உணர்ந்த முதல்வர், மாநிலம் முழுதும் ரவுடிகளை ஒழிக்க, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
அவர்களின் பட்டியலை பராமரித்து, கண்காணிக்க வேண்டும். போலீஸ் டி.ஜி.பி., உட்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது வழங்கும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
ரவுடிகள் ஒழிப்பு படை
ஒவ்வொரு சர்க்கிள் இன்ஸ்பெக்டரின் கீழ், ரவுடிகள் ஒழிப்பு படை அமைக்க வேண்டும்.
எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் நிலையங்களில், தனி ரவுடி பிரிவும் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குற்றச்சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, ரவுடிகள் ஒழிப்பு படை அமைப்பது குறித்து ஏ.சி.பி., முடிவெடுக்கலாம்.
படை செயல்பாடு
ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டால், அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களை ரவுடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவ்விஷயத்தில் கடமையில் இருந்து தவறும் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் அதிகார வரம்புக்குள் உள்ள அனைத்து ரவுடிகள், சமூக விரோத குழுக்கள் குறித்து, தகவல்களை அவ்வப்போது புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.
ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
புதிதாக உருவாகும் ரவுடிகள், கும்பல்கள் மற்றும் குற்ற சம்பவங்களை அடையாளம் கண்டு, அவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும்.
பொது அமைதி, நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும்.
தேவைப்பட்டால், ரவுடிகள் மீது குண்டாஸ், கே.சி.ஓ.சி.ஏ., எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.
