எஸ்.சி., சமூகத்தை விமர்சித்து பேசிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு 'பிடிவாரன்ட்'
எஸ்.சி., சமூகத்தை விமர்சித்து பேசிய பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுக்கு 'பிடிவாரன்ட்'
ADDED : மே 06, 2026 11:57 PM

பெங்களூரு: எஸ்.சி., சமூகத்தை விமர்சித்து பேசிய வழக்கில், ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிசுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தாவணகெரே மாவட்டம், ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ். கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு பின், ஹரிஷை அவரது அலுவலகத்தில் எஸ்.சி., சமூகத்தின் உட்பிரிவான மாதிகா சமூகத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
அப்போது பா.ஜ., ஆட்சியில் உங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியும், ஏன் காங்கிரசை ஆதரித்தீர்கள் என்று, வாக்குவாதம் செய்த ஹரிஷ், எஸ்.சி., சமூகத்தை விமர்சித்து ஆபாசமாக திட்டி உள்ளார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தாவணகெரே மாவட்ட தலைவர் ஹனுமந்தப்பா அளித்த புகாரில், ஹரிஹரா போலீசார், ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் மனு செய்தார்.
இதற்கிடையில், தாவணகெரே மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் விசாரித்தார். பல முறை நடந்த வழக்கு விசாரணைக்கு ஹரிஷ், அவரது வக்கீல் ஆஜராகவில்லை. இதனால் ஹரிசுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார். இன்றைக்குள் அவரை ஆஜர்படுத்தவும் போலீசாருக்கு, நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
