ADDED : ஏப் 04, 2026 04:52 AM

மைசூரு: நில தகராறு தொடர்பான வழக்கில், மைசூரு கலெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மைசூரு டவுன் கும்பாரகொப்பலுவில் வசித்தவர் சீதாராமகவுடா. இவருக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசுக்கு சொந்தமான நிலம் என்று 1980ம் ஆண்டு மைசூரு மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது. இதை எதிர்த்து, சீதாராமகவுடாவின் மகன் செலுவே கவுடா, பேரன் ஜெயராம் ஆகியோர், மைசூரு கூடுதல் சிவில் நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவாக 1994ல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இதனை எதிர்த்து, மைசூரு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் மனு செய்தனர். பல ஆண்டுகளாக விசாரணை நடந்தது. கடந்த ஆண்டு தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததுடன், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஆனாலும் நிலத்தை, மைசூரு மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனுவை செலுவே கவுடா தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, மைசூரு கலெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டார். மனு மீதான அடுத்த விசாரணையை 24ம் தேதி ஒத்திவைத்தார்.
