வாணி விலாஸ் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்
வாணி விலாஸ் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்
ADDED : ஏப் 09, 2026 02:05 AM
பெங்களூரு: மாறிய வாழ்க்கை நடைமுறை உட்பட, பல காரணங்களால் சில தம்பதியருக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இவர்களின் வசதிக்காக, பெங்களூரின் வாணி விலாஸ் மருத்துவமனையில், ஐ.வி.எப்., எனும் செயற்கை கருத்தரிப்பு மையம் துவங்கப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
குழந்தை இல்லாத தம்பதியர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வாழ்க்கை முறை மாறியது, உணவு பழக்கம் என, பல காரணங்களால் தம்பதிக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிராசையாகிறது.
இத்தகைய தம்பதிகளுக்கு ஐ.வி.எப்., சிகிச்சை அளிக்க, பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் இங்கு அதிகமான கட்டணம் வசூலிப்பதால் ஏழை, நடுத்தர குடும்பத்து தம்பதியரால் சிகிச்சை பெற முடிவதில்லை.
இவர்களின் நலனுக்காக, அரசு சார்பில் ஐ.வி.எப்., சிகிச்சை மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாணி விலாஸ் மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் ஐ.வி.எப்., சிகிச்சை மையம் துவக்கப்படும்.
வாணி விலாஸ், பெங்களூரின் முக்கியமான மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாகும். இது பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆய்வகம் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.
கர்நாடகாவின் மிகப்பெரிய தாய், சேய் மருத்துவமனையும் இதுதான். கூடுதல் சிகிச்சை தேவைப் படுவோர், இந்த மருத்துவமனைக்கு சிபாரிசு செய்யப்படுகின்றனர்.
மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவுக்கு தினமும் 250 முதல் 300 பேர் வருகின்றனர். மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பிரசவங்கள் நடக்கின்றன. எனவே இதே மருத்துவமனையில் ஐ.வி.எப்., சிகிச்சை மையம் துவக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இந்த மையத்தில் சிறப்பு டாக்டர்கள் அறைகள், ஆய்வகம், பதிவு கவுன்டர், கவுன்சலிங் அறை உட்பட, அனைத்து பிரிவுகளும் இருக்கும்.
ஐ.வி.எப்., சிகிச்சையளிக்க தேவையான மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
தனியார் மருத்துவமனைகளில், இத்தகைய சிகிச்சைக்கு 1.5 லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
வாணி விலாஸ் மருத்துவமனையில், ஆயுஷ்மான் பாரத், ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், ஐ.வி.எப்., சிகிச்சை அளிக்க, அரசு ஆலோசிக்கிறது. நடப்பாண்டு இறுதிக்குள், இம்மையம் செயல்பட துவங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
