கழுதைகளை பார்ப்பதால் தான் யோகம் நெகிழ்ச்சியுடன் கூறும் உதவி பேராசிரியர்
கழுதைகளை பார்ப்பதால் தான் யோகம் நெகிழ்ச்சியுடன் கூறும் உதவி பேராசிரியர்
ADDED : மே 09, 2026 11:50 PM

துமகூரின் மதுகிரியை சேர்ந்தவர் ரங்கே கவுடா, 45. தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக உள்ளார். மதுகிரி அருகே ஊவினஹள்ளி கிராமத்தில், 2 ஏக்கர் நிலம் வாங்கி, 'கீரா சாகர்' என்ற பெயரில் கழுதை பண்ணை நடத்துகிறார். கழுதை பால், சாணம், சிறுநீரை விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
கழுதை வளர்ப்பு குறித்து அவர் கூறியதாவது:
'என்னை பார் யோகம் வரும்' என்று கழுதை புகைப்படத்தை பலரும் மாட்டியுள்ளனர். அது, உண்மை தான். தினமும் கழுதைகளை பார்ப்பதால் தான், இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். 2 ஏக்கர் நிலத்தில், கழுதை பண்ணை அமைத்து, 100 கழுதைகளை வளர்க்கிறேன்.
அவைகளுக்கு உணவு வழங்குவதற்காக, 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு செடிகளை பயிரிட்டு வளர்க்கிறேன். கழுதை பண்ணை என்பது தங்க சுரங்கம் போன்றது. கழுதை பாலில் நிறைய சத்துக்கள் உள்ளன; தாய் பாலுக்கு நிகரானது. ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, தினமும் கழுதை பாலை ஏற்றுமதி செய்கிறேன். 1 லிட்டர் பாலை, 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.
கழுதையின் சிறுநீர் 1 லிட்டர் 300 ரூபாய்க்கும், சாணத்தை 1 கிலோ, 100 ரூபாய்க்கும் விற்கிறேன். கழுதை பாலில் இருந்து சோப்பு தயாரிக்கிறோம்.
அரசு சார்பில் வேளாண் கண்காட்சிகளில், ஸ்டால் அமைத்து கழுதை பால், சோப்பு விற்பனை செய்கிறோம். கழுதையை பொதி சுமக்க மட்டும் பயன்படுத்த கூடாது.
கழுதையால் பல நன்மைகள் உள்ளது என்பதை, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கழுதைகளை நான் முறையாக பராமரித்தால், அவைகளால் நமக்கு அதிக நன்மை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
