/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலை வழக்கில் ஜோதிடர் கமலாகர் பட் கைது; காங்., - எம்.எல்.சி., பா.ஜ., - எம்.எல்.ஏ., மோதல்
/
கொலை வழக்கில் ஜோதிடர் கமலாகர் பட் கைது; காங்., - எம்.எல்.சி., பா.ஜ., - எம்.எல்.ஏ., மோதல்
கொலை வழக்கில் ஜோதிடர் கமலாகர் பட் கைது; காங்., - எம்.எல்.சி., பா.ஜ., - எம்.எல்.ஏ., மோதல்
கொலை வழக்கில் ஜோதிடர் கமலாகர் பட் கைது; காங்., - எம்.எல்.சி., பா.ஜ., - எம்.எல்.ஏ., மோதல்
ADDED : பிப் 05, 2026 06:39 AM

பெங்களூரு : கொலை வழக்கில் ஜோதிடர் கமலாகர் பட் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
உத்தர கன்னடாவின் சித்தாபூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தில் வசித்த வசந்த் நாயக், 41, கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஷிவமொக்காவை சேர்ந்த பிரபல ஜோதிடர் கமலாகர் பட், 47, அவரது கள்ளக்காதலி சுசித்ரா, 39 உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்தர கன்னடா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின்படி, ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த போது, அவரேகுப்பா கிராம மக்கள், அவர்களை தாக்கினர்.
அறியாமை இந்நிலையில் கமலாகர் பட்டுடன், பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா, பெங்களூரு ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் எடுத்து கொண்ட புகைப்படங்களை, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் தனது, 'எக்ஸ்' பக்கத்தில் நேற்று வெளியிட்டு கூறியிருப்பதாவது:
சங் பரிவார் பின்னணியில் இருந்து வந்துள்ள விஜயேந்திரா, சுரேஷ்குமார் போன்றோர், கொலை வழக்கில் கைதான ஜோதிடர் கமலாகர் பட்டை ஆதரிக்கின்றனர். இந்த வழக்கில் எம்.எல்.ஏ., சுரேஷ்குமாருக்கு எந்த தொடர்பும் இல்லையா? முன்னாள் சட்ட அமைச்சரான அவர், அறியாமையில் இருப்பது மாநிலத்திற்கு சோகம்.
தகாத உறவு தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பெண்களை, பாலியல்ரீதியாக கமலாகர் பட் தொந்தரவு செய்து உள்ளார். ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து, அது கொலை வரை சென்று உள்ளது. இவரை போன்றவர்கள் மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்துகின்றனர்.
இவர்களை போன்றவர்களை சுரேஷ்குமார் ஊக்குவிக்கிறார். பெண்களை அவமதிப்பவர்களுக்கு மட்டுமே, பா.ஜ.,வில் பதவிகள் கிடைக்குமா? சுரேஷ்குமார் அரசியலமைப்பை மீறியதன் விளைவு தான் கமலாகர் பட் கொலைகாரனாக மாற காரணம்.
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சுரேஷ்குமாரின் முகநுால் பதிவு:
சித்தாபூரில் நடந்த கொலைக்கு அரசியல் சாயம் பூசி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்வது, ஹரிபிரசாத்தின் அறிவுசார் திவால் நிலையை காட்டுகிறது. மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் தினமும் ஆயிரக்கணக்கானோரை சந்திக்கின்றனர். புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகளுடன் புகைப்படம் எடுப்போர் ஏதாவது குற்றம் செய்தால், அதற்கு நாம் பொறுப்பேற்க முடியுமா. ஹரிபிரசாத் கூறுவது குழந்தைத்தனமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்தவர்கள் சிறைக்கு சென்ற உதாரணம் உள்ளது.
அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தார்மீக பொறுப்பு ஏற்பரா. முன்னாள் சட்ட அமைச்சராக நான், அரசியலமைப்பின் ஒவ்வொரு வரியின் முக்கியத்துவத்தை அறிவேன். நேரடி ஆதாரம் இல்லாமல் என் மீது குற்றம் சாட்டுவது அழுகிய மனநிலை கொண்டவர்களால் மட்டுமே முடியும்.
நல்ல புத்தி நான் ஜோதிடத்தை பெரிதாக நம்பும் நபரும் இல்லை; மூடநம்பிக்கையை ஆதரிப்பவனும் இல்லை. மத நம்பிக்கைகளுக்கும், குற்ற செயல்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாளும் இல்லை. ஜோதிடராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் கொலைகாரன் கொலைகாரன் தான்.
அவர்கள், சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இறந்த உடலுக்கு முன்பு நின்று அரசியல் ஆதாயம் தேடுவது, ஹரிபிரசாத்தின் பழக்கம். இந்த சமூகத்திற்கு செய்யும் துரோகம். கடவுள் அவருக்கு நல்ல புத்தியை வழங்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

