எல்.பி.ஜி., காஸ் பற்றாக்குறை எதிரொலி: ஊருக்கு செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்
எல்.பி.ஜி., காஸ் பற்றாக்குறை எதிரொலி: ஊருக்கு செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்
ADDED : ஏப் 09, 2026 02:09 AM
பெங்களூரு: எல்.பி.ஜி., காஸ் பற்றாக்குறையால், ஆட்டோ ஓட்டுநர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஆட்டோ ஓட்ட முடியாமல், பலரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் சூழல் காரணமாக, காஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும், எல்.பி.ஜி., காஸ் பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுகின்றனர். பெங்களூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில் காஸ் கிடைக்காமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
வெளி மாவட்ட கிராமங்களில் இருந்து பலர், பெங்களூருக்கு வந்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துகின்றனர். காஸ் பற்றாக்குறை காரணமாக, ஆட்டோ ஓட்ட முடியாமல், வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ளது.
வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுவதை, தற்காலிகமாக நிறுத்திவிட்டு சொந்த கிராமத்துக்கு செல்கின்றனர்.
தனியார் பங்க்குகளில் ஸ்டாக் இல்லை. எனவே இவைகள் மூடப்பட்டுள்ளன.
அரசு சார்ந்த சில பங்க்குகளில் மட்டும், ஓரளவு எரிபொருள் வினியோகிக்கப்படுகிறது.
ஆனால் நாள் முழுதும் வரிசையில் நின்றாலும், காஸ் கிடைப்பதில்லை. பிரச்னைக்கு தீர்வு காணும்படி, அரசிடம் மன்றாடுகின்றனர்.
இது தொடர்பாக, அரசு வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் ஆட்டோ காஸ் பற்றாக்குறை இல்லை. தேவையான அளவில் வினியோகிக்கப்படுகிறது.
பல்வேறு ஆட்டோ காஸ் பங்க்குகளில், காஸ் பற்றாக்குறை உள்ளதாக தவறான தகவல் பரவியுள்ளது. இதை ஆட்டோ ஓட்டுநர்கள் பொருட்படுத்த வேண்டாம்.
கடந்த சில நாட்களாக, ஆட்டோ ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் பங்க்குகளின் முன்பாக, நீண்ட வரிசையில் காத்திருப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. காஸ் பற்றாக்குறை உள்ளதாக, தகவல்கள் வெளியாவது வெறும் வதந்தி.
அரசு சார்ந்த எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் மூலம், அதிகமான காஸ் வினியோகிக்கப்படுகிறது.
இதற்கு முன் இம்மூன்று நிறுவனங்கள் சராசரியாக 56.67 டன் ஆட்டோ காஸ், வினியோகித்த ன. ஆனால் தற்போது தேவை அதிகரித்ததால், காஸ் வினியோக அளவை அதிகரித்துள்ளன.
இந்த காஸ் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அவர்கள் கலக்கமடைய தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
