பெண் என்பதால் ஜாமின் வழங்க முடியாது: கணவர் கொலை வழக்கில் ஐகோர்ட் 'கறார்'
பெண் என்பதால் ஜாமின் வழங்க முடியாது: கணவர் கொலை வழக்கில் ஐகோர்ட் 'கறார்'
ADDED : மே 27, 2026 06:40 AM

பெங்களூரு: 'பெண் என்பதால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவருக்கு ஜாமின் வழங்க முடியாது' என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரவிகுமார். ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். 2025, ஜூலை 20ல், சிவமூர்த்தி என்ற இடத்தில் தலையிலும், மர்ம உறுப்பிலும் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தார்.
ரவிகுமாரின் மகன் விஷ்ணு அளித்த புகாரின்படி, சித்ரதுர்கா ரூரல் போலீசார் நடத்திய விசாரணையில் ரவிகுமார் மனைவி சுனிதாவுக்கும், கணேஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்தபோது, கள்ளத்தொடர்பை ரவிகுமார் கண்டித்ததால், இருவரும் சேர்ந்து அவரை கொன்றது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க கோரி, சுனிதா தாக்கல் செய்த மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீசந்தா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'குற்றம் சாட்டப்பட்டவர் பெண் என்பதால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்றார்.
நீதிபதி ஸ்ரீசாந்தா கூறுகையில், ''இச்சம்பவத்தை பார்க்கும் போது கைதான இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரிகிறது. அத்துடன் முதல் குற்றவாளியான கணேஷ், சுனிதா கணவரை கொல்ல அவருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
''இவர்களின் உறவுக்கு கணவர் இடையூறாக இருப்பதால், அவரை கொன்றுள்ளனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் பெண் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்க முடியாது. ஆனாலும், இவ்வழக்கில் முக்கிய சாட்சியிடம் விசாரணை முடிந்ததும், மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யலாம்,'' என்றார்.
