/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்லாரி கலவரம் எதிரொலி கோலாரில் பேனருக்கு கட்டுப்பாடு
/
பல்லாரி கலவரம் எதிரொலி கோலாரில் பேனருக்கு கட்டுப்பாடு
பல்லாரி கலவரம் எதிரொலி கோலாரில் பேனருக்கு கட்டுப்பாடு
பல்லாரி கலவரம் எதிரொலி கோலாரில் பேனருக்கு கட்டுப்பாடு
ADDED : பிப் 06, 2026 05:51 AM
தங்கவயல்: பல்லாரியில் பேனர் வைத்ததில் ஏற்பட்ட கலவரம் எதிரொலியாக, கோலார் மாவட்டத்தில் பேனர் வைக்க கட்டுப்பாடுகள் விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பல்லாரியில் வால்மீகி சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக பேனர் வைக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறி துப்பாக்கி குண்டு பாய்ந்து, காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் உயிரிழந்தார். இச்சம்பவம் எதிரொலியாக மாநிலம் முழுதும் பேனர், கட் - அவுட்டுகள் வைப்பதில் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த, மாவட்ட நிர்வாகங்கள் யோசித்து வருகின்றன.
இந்நிலையில் கோலார் மாவட்ட கலெக்டர் ரவி நேற்று பிறப்பித்த உத்தரவு:
கோலார் மாவட்டத்தில் தேசிய விழாக்கள், பொது கூட்டங்கள், பிறந்தநாள் விழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடுவதற்கு, பேனர், கட் - அவுட்டுகள் வைக்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், விழா ஏற்பட்டாளர்கள் அனுமதி பெறுவது கட்டாயம். பேனர் நிறுவுவதற்கான நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
சதுர அடிக்கு எவ்வளவு கட்டணமோ அதை செலுத்த வேண்டும். பேனரில் கன்னட மொழி 60 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும். எந்த நிகழ்வாக இருந்தாலும், மூன்று நாட்களுக்கு மட்டுமே பேனர் நிறுவ அனுமதி கிடைக்கும். காலக்கெடுவை மீறினால், அதிகாரிகளால் பேனர் அகற்றப்படும்.
அரசுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகள் கொண்ட, பேனர், பிளக்ஸ், பதாகை வைக்க கூடாது. அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை சுவர்களில் சுவரொட்டி ஒட்ட கூடாது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

