'மாஜி' தாசில்தாருக்கு '4 ஆண்டு' லஞ்ச வழக்கில் நீதிமன்றம் அதிரடி
'மாஜி' தாசில்தாருக்கு '4 ஆண்டு' லஞ்ச வழக்கில் நீதிமன்றம் அதிரடி
ADDED : ஜூலை 11, 2026 04:26 AM

தார்வாட்: ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, லோக் ஆயுக்தாவிடம் சிக்கிய முன்னாள் தாசில்தாருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கலபுரகி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கலபுரகி மாவட்டம், அப்ஜல்புரா தாலுகாவின், கரஜகி கிராமத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில், கடந்த, 2017ல் சிவலிங்கைய்யா பசய்ய மடா என்பவர், ஒப்பந்த அடிப்படையில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக பணியாற்றினார். இவர் பொது மக்களிடம் லஞ்சம் வாங்குவதாக, அன்றைய தாசில்தார் சசிகலா, 49, என்பவருக்கு புகார் வந்தது.
சசிகலாவும், சிவலிங்கய்யா பசய்ய மடாவிடம் விசாரித்த போது, தன் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றும்படி மன்றாடினார். அப்போது சசிகலா தனக்கு 1 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கோரினர்.
தாசில்தாரே லஞ்சம் கேட்டதால், வெறுப்படைந்த சிவலிங்கையா, இது குறித்து லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். அதிகாரிகளும் நடவடிக்கையில் இறங்கினர். இவர்கள் வகுத்து கொடுத்த திட்டப்படி, 2017ன் ஆகஸ்ட் 31ம் தேதியன்று, சிவலிங்கய்யா 1 லட்சம் ரூபாயை தாசில்தார் சசிகலாவிடம் அவரின் உதவியாளர் கொடுத்தார். லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தி, இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
தற்போது சசிகலா, யாத்கிர் மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவர் மீது ஊழல் வழக்கு இருந்ததால், கடந்த வாரம் இவரை மாநில அரசு, கட்டாய ஓய்வுக்கு உத்தரவிட்டு, பணியில் இருந்து விடுவித்தது.
இதற்கிடையே லஞ்ச வழக்கு விசாரணையை முடித்த, லோக் ஆயுக்தா போலீசார், கலபுரகியின் முதன்மை மாவட்ட மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் சசிகலா மற்றும் அவரின் உதவியாளர் சிவானந்த ஜ மகன்டியின் குற்றம் உறுதியானது. எனவே, இவர்களுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், தலா, 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி லட்சுமி நாராயணா, நேற்று தீர்ப்பளித்தார்.
