/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மழைநீர் அகற்றும் பணியில் தீவிரம் காட்டுங்கள்'
/
'மழைநீர் அகற்றும் பணியில் தீவிரம் காட்டுங்கள்'
ADDED : மே 27, 2025 12:13 AM

பெங்களூரு : நகரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள நீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என, பெருநகர பெங்களூரு ஆணைய கமிஷனர் மஹேஸ்வர ராவ் அறிவுறுத்தினார்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியவில்லை. இதனால், பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து பெருநகர பெங்களூரு ஆணையத்தின் கமிஷனர் மஹேஸ்வர ராவ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அனைத்து மண்டலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, கமிஷனர் பேசியதாவது:
பெருநகர பெங்களூரு ஆணையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும். மழைக்காலங்களில் வடிகால்களில் மழைநீர் வேகமாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகள்; தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய 210 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில், 166 பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதை அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மீதமுள்ள 44 இடங்களிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கும் சாலைகள் குறித்து, போக்குவரத்து போலீஸ் துறை விபரங்களை வழங்கி உள்ளது. இதை அடிப்படையாக கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நகரத்தில் உள்ள 183 ஏரிகளில், 13 ஏரிகளில் ஏற்கனவே தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டன. மீதமுள்ள ஏரிகளிலும் தடுப்பு கதவுகள் போடப்படும். சுத்தம் செய்யப்படாத ஏரிகளை சுத்தம் செய்ய வேண்டும். காற்று அதிகமாக வீசும்போதும், மழையில் சாயும் மரங்கள், அவற்றின் கிளைகள் உடனடியாக அகற்ற வேண்டும்.
ஆட்டோக்களில் சேகரிக்கப்படும் குப்பை சாலையோரங்களில் வைத்து பெரிய லாரிகளில் மாற்றப்படுகின்றன. இந்த செயல்பாடுகள், சாலையோரங்களில் நடக்காமல், ஜி.பி.ஏ.,வுக்கு சொந்தமான இடங்களில் நடக்க வேண்டும்.
நடைபாதைகளை தூய்மையாக வைத்திருக்கவும்; அதே சமயம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
எஸ்.சி., கணக்கெடுப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு பேசினார்.