/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோவில் அதிக கட்டணம்'
/
'நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோவில் அதிக கட்டணம்'
ADDED : செப் 05, 2025 11:07 PM

பெங்களூரு:நாட்டிலேயே பெங்களூரு மெட்ரோ ரயில்களில் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறி உள்ளார்.
பெங்களரு மெட்ரோ ரயிலில் கடந்த பிப்ரவரியில் அதிகபட்ச டிக்கெட் விலை 60 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்தது. காரணம் எதுவும் குறிப்பிடாமல், டிக்கெட் விலை கிட்டத்தட்ட 30 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். கட்டணம் உயர்த்தப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும், இன்றும் கூட பயணியர் பலரும் மெட்ரோ நிர்வாகத்தை சபித்துக் கொண்டே மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இதுகுறித்து, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறியதாவது:
பெங்களூரு மெட்ரோ ரயிலில் கட்டணம் 136 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவிலே அதிக கட்டணம் வசூலிக்கும் மெட்ரோ ரயில் நிலையமாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையம் உருமாறி உள்ளது.
பெங்களூரு மெட்ரோவில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இருப்பினும், டிக்கெட் விலை நாட்டிலேயே மிகவும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. புதுடில்லி மெட்ரோவில் 4 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால், 30 ரூபாய் உயர்த்தப்பட்டால் எப்படி ஏற்றுக்கொள்வர்?
பொதுப்போக்குவரத்து நிறுவனம் கட்டணத்தை அதிகமாக உயர்த்துவது, மக்கள் தனியார் வாகனங்களில் பயணம் செய்தவதை ஊக்குவிப்பதாக உள்ளது. மாநில அரசு உடனடியாக மெட்ரோ கட்டணத்தை குறைக்க வேண்டும்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் கட்டணம் குறித்த, கட்டண நிர்ணய குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்துள்ளேன். இந்த மனுவின் மீதான இறுதிகட்ட விசாரணை வரும் 22ம் தேதி நடக்கிறது.
உயர் நீதிமன்றத்திலே வழக்கு தொடர்ந்த போதும், பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் இதுவரை கட்டண நிர்ணய குழுவின் அறிக்கையை வெளியிடாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.