பகீர் குற்றச்சாட்டு! பஞ்சாயத்து இன்ஜி., தேர்விலும் முறைகேடு நடந்ததாக...
பகீர் குற்றச்சாட்டு! பஞ்சாயத்து இன்ஜி., தேர்விலும் முறைகேடு நடந்ததாக...
ADDED : ஆக 28, 2026 11:24 PM

கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்திய பல தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, கடந்த ஜனவரியில் நடந்த கால்நடை மருத்துவர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்தது அம்பலமாகியது.
இதில், கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை, அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இந்நிலையில், கே.பி.எஸ்.சி., நடத்திய பஞ்சாயத்து ராஜ் துறை உதவி இன்ஜினியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பஞ்சாயத்து ராஜ் துறையில், 2023ம் ஆண்டு நடந்த, 24 உதவி இன்ஜினியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வில் முறைகேடு நடந்தது. ஓம்.எம்.ஆர்., எனும் விடைத்தாள்களில், கார்பன் பேப்பர்களை பயன்படுத்தி முறைகேடுகள் நடந்து உள்ளன.
ஒரு பணியிடத்திற்கு, 40 முதல், 80 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக வாங்கப்பட்டது.விதிகளை மீறி அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தேர்வு மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளன.
இந்த முறைகேடு, பிரியங்க் கார்கே பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக இருந்த போதே அரங்கேறியது. எனவே, அதற்கு அவர் தார்மிக பொறுப்பேற்று, தற்போது அவர் வகிக்கும் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த முறைகேடுகளுக்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இந்த முறைகேடுகள் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த லட்சணத்தில், 75,000 அரசு காலிப்பணியிடங்களை நிரப்பும் என மாநில அரசு கூறியது வெட்கக்கேடானது.
இதுபோன்ற சம்பவங்களால் அரசு தேர்வுகள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையில்லாமல் போகிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாவிட்டால், எதற்காக பிரியங்க் கார்கே உள்துறை அமைச்சராக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியதாவது:
பா.ஜ., ஆட்சியில் சிவசங்கரப்பா கே.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். அப்பதவிக்காக அவர் 200 கோடி ரூபாய் வழங்கியதாக கூறப்படுவதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதை குமாரசாமி விளக்க வேண்டும். அவருக்கு பொது அறிவில் ஏதேனும் குறை இருப்பதாக நினைக்கிறேன்.
பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலாக குமாரசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மத்திய அமைச்சராக குமாரசாமி கர்நாடகாவின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் நடக்கும் விவகாரங்கள் குறித்து பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
