ஆறு ஆண்டுகளுக்கு பின் தார்வாட் வந்த வினய் குல்கர்னி
ஆறு ஆண்டுகளுக்கு பின் தார்வாட் வந்த வினய் குல்கர்னி
ADDED : ஆக 28, 2026 11:24 PM

தார்வாட்: கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, தார்வாடுக்கு வந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
கடந்த, 2016 ஜூனில், தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து, பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ்கவுடா கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், தார்வாட் ரூரல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, 2020ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியன்று கைதானார்.
ஒன்பது மாதங்கள், பெலகாவியின், ஹிண்டல்கா சிறையில் இருந்த இவருக்கு, உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் அளித்தது.
யோகேஷ் கவுடா கொலை வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கும் படி, வினய்குல்கர்னி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றமும் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, ஜாமின் வழங்கி, நடப்பாண்டு ஜூலை 31ம் தேதி உத்தரவிட்டது. தார்வாட் செல்லவும் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின், நேற்று தார்வாடுக்கு வந்தார். அவருக்கு ஆதரவாளர்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
வினய் குல்கர்னி நேராக தன் வீட்டுக்கு செல்லாமல், தார்வாடின், ஹாரோ பெளவடி கிராமத்தில் உள்ள வீர பத்ரேஸ்வரா கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
அதன் பின் சவதத்தி ரேணுகா எல்லம்மா கோவிலுக்கு சென்றார். ஹூப்பள்ளியின் சித்தரூட மடத்துக்கு சென்றார். அதன்பின் தன் இல்லத்துக்கு சென்றார்.
