ADDED : செப் 11, 2026 02:08 AM
பெங்களூரு: கர்நாடகா பிக்கிள் பால் பிரீமியர் லீக் போட்டி, அக்., 9 முதல், 14ம் தேதி வரை முதன்முறையாக நடக்கிறது. இப்போட்டியில் ஏழு அணிகள் இடம் பெற உள்ளன.
பிக்கிள் பால் என்பது டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு பிரபலமான விளையாட்டு ஆகும். இதை ஒற்றையர் அல்லது இரட்டையர் என இரு தரப்பினரும் விளையாடலாம்.
கர்நாடக மாநில பிக்கிள் பால் சங்கம் மற்றும் என்ட்ரோபி ஸ்போர்ட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் ஆகியவை இணைந்து, கர்நாடகா பிக்கிள்பால் பிரீமியர் லீக் போட்டியை நடத்துகிறது. இந்த லீக்கிற்கான துாதராக நடிகர் ஸ்ரீமுரளி நியமக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, சங்க பொது செயலர் ரஜத் கங்கர் கூறியதாவது:
இந்த லீக் போட்டி, ஜி.கே.வி.கே., கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு அணியிலும், 18 வீரர்கள் இருப்பர். இவர்களில் ஒன்பது பேர், கர்நாடகாவை சேர்ந்தவர்கள், ஒன்பது பேர் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள். மாநிலத்தை சேர்ந்த வீரரே, ஒவ்வொரு அணியின் தலைவராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சங்க தலைவர் சிவகுமார் கூறுகையில், ''நாட்டின் தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவது, மாநில வீரர்களின் திறன்களை மேம்படுத்த உதவும்.
'லீக் போட்டியில் பெங்களூரு ஸ்மாசர்ஸ், கூர்க் ஒரிஜினல்ஸ், மங்களூரு ரோயர்ஸ், மைசூரு ராயல்ஸ், ஷிவமொக்கா மாஸ்டர் பிளிஸ், பல்லாரி டஸ்கர்ஸ், துமகூரு டைட்டன்ஸ் ஆகிய ஏழு அணிகள் மோதுகின்றன,'' என்றார்.
நடிகர் ஸ்ரீமுரளி கூறுகையில், ''பிக்கிள் பால் விளையாட்டை கற்று கொள்வதில் எனக்கு ஆர்வம் உள்ளது.
தற்போது படப்பிடிப்புகளில் மும்முரமாக இருப்பதால், நேரம் கிடைக்கவில்லை. அடுத்த முறை ஒரு அணிக்காக விளையாடினாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை. போட்டிக்காக இல்லாவிட்டாலும், அனைவரும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக, ஏதேனும் ஒரு விளைாட்டில் ஈடுபடுவது நல்லது,'' என்றார்.
