அமைச்சர் அறிவிப்பால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு சிக்கல்
அமைச்சர் அறிவிப்பால் 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு சிக்கல்
ADDED : செப் 01, 2026 03:18 AM

பெங்களூரு: ''சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராத தொகை செலுத்தாமல், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது,'' என வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கறாராக கூறி உள்ளார்.
கன்னட, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 13வது சீசன் வரும் 6ம் தேதி துவங்குகிறது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கு கிறார். இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் ஜாலிவுட் ஸ்டுடியோவில் நடக்க உள்ளது.
இதே இடத்திலேயே கடந்த ஆண்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, வீட்டிலிருந்து வெளியேறிய கழிவு நீர், திறந்த வெளியில் விடப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதால் பிக்பாஸ் வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின், அன்றைய துணை முதல்வர் சிவகுமாரின் தலையீட்டின் பெயரில் மீண்டும் நிகழ்ச்சி துவங்கியது.
இது குறித்து, வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த ஜாலிவுட் ஸ்டுடியோ அனுமதி பெறவில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தாமல் இருந்தாலும், ஸ்டுடியோவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் இருந்தாலும் அனுமதி வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால், நடப்பாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
