/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் இல்லாத கோலார் ஒரே நோக்கத்தில் பயணிக்கும் பா.ஜ., - ம.ஜ.த.,
/
காங்கிரஸ் இல்லாத கோலார் ஒரே நோக்கத்தில் பயணிக்கும் பா.ஜ., - ம.ஜ.த.,
காங்கிரஸ் இல்லாத கோலார் ஒரே நோக்கத்தில் பயணிக்கும் பா.ஜ., - ம.ஜ.த.,
காங்கிரஸ் இல்லாத கோலார் ஒரே நோக்கத்தில் பயணிக்கும் பா.ஜ., - ம.ஜ.த.,
ADDED : மார் 04, 2026 05:02 AM
கோலார் மாவட்டத்தில், ஆறு தொகுதிகளில் ஒன்று கூட பா.ஜ., வசம் இல்லை. இந்த தோல்வியால் அக்கட்சி தொய்வடைந்துள்ளது.
ஏற்கனவே, பா.ஜ., வசம் இருந்த தங்கவயல், மாலுார், பங்கார்பேட்டை தொகுதிகளும் கை நழுவி போயின. எனவே, அடுத்த சட்டசபை தேர்தல், இந்த மாவட்டத்தில் பா.ஜ.,வுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
'காங்கிரஸ் இல்லாத கோலார்' ஆக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மும்முரமாக உள்ளது.
'இதற்காக ஓட்டுச்சாவடி குழுவை அமைத்து பம்பரமாக சுழலத் தொடங்கி உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கவும் தயாராகி வருகின்றனர்.
அண்மையில், இந்துக்களின், 'சமாஜ உத்சவம்' என்ற பெயரில் ஹிந்துக்கள் மாநாட்டை பா.ஜ., நடத்தியது. கோலார் மட்டுமின்றி மாநிலம் முழுதும் நடத்தியது. இதில், பா.ஜ., கொடியை துாக்கி பிடிக்கவில்லையே தவிர, காவி கொடிகளுடன் பா.ஜ.,வினர் ஒற்றுமையுடன் அணிவகுத்தனர்.
மாநாடுகள் இதே போன்று கோலார் மாவட்டத்தில், ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு, மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டன.
கோலாரில் வர்த்துார் பிரகாஷ், ஓம்சக்தி சலபதி, பங்கார்பேட்டையில் முன்னாள் எம்.பி., எஸ்.முனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கட முனி, ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மகேஷ்பாபு, தங்கவயலில் முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி, ஷைலஜா முனிசாமி, அஸ்வினி, மாலுாரில் மஞ்சுநாத் கவுடா என, பலரும் தங்கள் பலத்தை காட்ட அணி திரண்டனர்.
கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் இழந்த மாலுாரை மீட்டெடுக்க முழு வீச்சில் பிரசாரத்தை பா.ஜ. தொடங்கி உள்ளது. பங்கார்பேட்டையை மீட்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருபவர் பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி. ஆளும் காங்கிரஸ் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு வருகிறார்.
கண்காணிப்பு பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.ஜ.த.,வும் கோலார் மாவட்டத்தை கண்காணித்து வருகிறது. மத்திய அமைச்சர் குமாரசாமி, நிகில் குமாரசாமி உட்பட முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கோலார் மாவட்டத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
கோலார் லோக்சபா தொகுதி, முல்பாகல், சீனிவாசப்பூர் ஆகிய இரு சட்டசபை தொகுதிகள் ம.ஜ.த., வசம் இருப்பதால் உள்ளாட்சி தேர்தலை கவனத்தில் கொண்டு களம் இறங்கி உள்ளனர்.
காங்கிரஸ் இல்லாத கோலாராக மாற்ற வேண்டும் என்பதே, பா.ஜ.,வின் நோக்கமாக உள்ளது. இதற்காக உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களை பா.ஜ.,வுக்குள் இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.
ஆறு தொகுதிகளிலுமே வேலி தாண்டும் வெள்ளாடுகள் உள்ளன என்பது பா.ஜ.,வின் கருத்தாக உள்ளது. அதேநேரத்தில், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலுமே உட்கட்சி குழப்பத்தால் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

