கனவு காணும் முதல்வர் சிவகுமார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால்
கனவு காணும் முதல்வர் சிவகுமார் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால்
ADDED : செப் 12, 2026 11:48 PM

பெங்களூரு: ''அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்வராவேன் என்று சிவகுமார் கனவு காண்கிறார். இந்த கனவு நனவாகாது என்பது அவருக்கு தெரியும்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு பா.ஜ., அலுவலகத்தில் நேற்று நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் விஜயேந்திரா பேசியதாவது:
சுதந்திர போராட்டத்தின் போது, நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வை துாண்டிய வந்தே பாரத் பாடலை அவமதிக்கும் காங்கிரஸ், விதான் சவுதாவில், பாகிஸ்தானை ஆதரிக்கும்.
இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு பிரச்னைகளில் காங்கிரஸ் அரசு, கடந்த காலத்தில் ஒன்றை சொல்லி, மற்றொன்றை செய்துள்ளது. நாட்டை ஒருங்கிணைத்து வழிநடத்த பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரசோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஓட்டுகளை பெற முயற்சிக்கிறது.
மாநில மக்களின் காதுகளில் பூ சுற்றி, ஆட்சிக்கு வர பார்க்கிறது. ஆனால், பிரதமர் மோடியோ, 2047க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி காண வேண்டும் என முயற்சிக்கிறார்.
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நீதி கிடைக்க செய்தார். மத்தியில் மோடியின் அமைச்சரவையில் உள்ள, 71 அமைச்சர்களில், 37 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள்.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு பின் முதல்வராவேன் என்று சிவகுமார் கனவு காண்கிறார். இந்த கனவு நனவாகாது என்பது அவருக்கு தெரியும். அடுத்த முறை பா.ஜ., ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.
ஐந்து வாக்குறுதிகள் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், மாநில மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. ஏழைகள், விவசாயிகள் மீது அக்கறை இல்லை.
பிரதமர் மோடியின், 25 ஆண்டு கால பொது சேவையை முன்னிட்டு, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் விருப்பப்படி, செப்., 17 முதல் அக்., 17 வரை 'சேவா சங்கல்ப் அபியான்' எனும் பெயரில், மக்களுக்கு தேவையான சேவைகள் செய்யப்படும்.
மேலும், மாநிலம் முழுதும் உள்ள ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றுதல் உட்பட 12 விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
