/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு காங்., அரசு மீது பா.ஜ., தலைவர்கள் பாய்ச்சல்
/
விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு காங்., அரசு மீது பா.ஜ., தலைவர்கள் பாய்ச்சல்
விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு காங்., அரசு மீது பா.ஜ., தலைவர்கள் பாய்ச்சல்
விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு காங்., அரசு மீது பா.ஜ., தலைவர்கள் பாய்ச்சல்
ADDED : பிப் 19, 2026 07:24 AM
பெங்களூரு: விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்த, காங்கிரஸ் அரசு மீது, பா.ஜ., கடும் கோபம் அடைந்து உள்ளது.
பெங்களூரு விதான் சவுதா கர்நாடக அரசின் அதிகார மையமாக உள்ளது. இங்கு சபாநாயகர், மேல்சபை தலைவர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் அலுவலகங்கள் உள்ளன. ஏராளமான அரசு அலுவலகங்களும் இங்கு அமைந்து உள்ளன.
தரை தளம் உட்பட விதான் சவுதாவின் நான்கு மாடிகளுக்கும், ஊடகத்தினர் தடையின்றி செல்லவும், அமைச்சர்களை சந்தித்து பேட்டி எடுக்கவும் அனுமதி இருந்தது. விதான் சவுதா வரும் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின.
நகை, பணம் திருட்டு இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி பசவராஜ் அலுவலகத்திற்கு வந்தவர், கையில் கொண்டு வந்த நகை, பணம் இருந்த பை திருடப்பட்டது.
'டி' குரூப் ஊழியர் அந்தோணி என்பவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் எதிரொலியாக, விதான் சவுதாவில் பாதுகாப்பை அதிகரிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, தகவல் துறைக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்த கடிதத்தில், 'விதான் சவுதாவுக்கு அமைச்சர்கள் வரும் போது அவர்களை பின்தொடர்ந்து சென்று பேட்டி எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்க கூடாது. மேற்கு நுழைவுவாயில் பகுதியில் ஊடகத்திற்கு என்று ஒதுக்கப்படும் இடத்தில் தான் பேட்டி எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த கடிதம் வெளியான நிலையில், அரசு மீது எதிர்க்கட்சியான பா.ஜ., பொங்கி எழுந்து உள்ளது.
இருண்ட உத்தரவு எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''அமைச்சர் அலுவலகத்தில் தங்க நகைகள், பணம் திருடப்பட்டது பற்றி ஊடகங்கள் அம்பலப்படுத்தியதால், அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
' 'விதான் சவுதா காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இல்லை. 7.50 கோடி கன்னடர்களுக்கு சொந்தமானது. ஊடகங்களை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.
' ' நியமிக்கப்பட்ட இடத்தில் தான் பேட்டி எடுக்க வேண்டும் என்று, ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்க, வெறுப்பு பேச்சு தடை சட்டத்தை இயற்ற நினைப்பவர்கள், ஊடகங்கள் குரலையும் ஒடுக்க பார்க்கின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் ஊடகத்தினரை கட்டுப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இது அவமானத்தின் உச்சம்,'' என்றார்.
எலஹங்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., விஸ்வநாத் கூறுகையில், ''அரசின் இந்த முடிவு ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் மீதான தாக்குதல். இந்த உத்தரவு அவசர நிலையை ஞாபகப்படுத்துகிறது. பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்வது அரசின் பொறுப்பு,'' என்றார்.
ம.ஜ.த.,வின் நிகில் கூறுகையில், ''விதான் சவுதாவில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க, எந்த அரசியலமைப்பில் விதி உள்ளது.
' 'ஊடகங்களை கூண்டில் அடைக்க பார்க்கும் இந்த இருண்ட உத்தரவு, அவசர நிலையின் தொடர்ச்சி,'' என்றார்.

