உமர் காலித் எழுதிய புத்தகம் வெளியீடு போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் கைது
உமர் காலித் எழுதிய புத்தகம் வெளியீடு போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் கைது
ADDED : ஏப் 29, 2026 01:45 AM

பெங்களூரு: டில்லி கலவர வழக்கில் கைதான உமர் காலித் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டதை கண்டித்து, போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் கடந்த 2020ல் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ள உமர் காலித், சிறையில் இருந்தபடியே எழுதிய 'உமர் காலித் தி வேல்ர்ட்' புத்தகத்தை அவரது ஆதரவாளர்கள், கடந்த பிப்ரவரி மாதம் டில்லியில் வெளியிட்டனர்.
பெங்களூரு தொம்மலுாரில் உள்ள பெங்களூரு சர்வதேச மையத்தில், உமர் காலித் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று, பா.ஜ., தலைவர்கள் குழு நேற்று முன்தினம், போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் மனு அளித்தனர். ஆனாலும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
நேற்று மாலை ஏற்கனவே திட்டமிட்டப்படி புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு முன்பு, பா.ஜ., இளைஞர் அணியினர் போராட்டம் நடத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தேச துரோகிகள், பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் அரசு ஆதரவாக இருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர்கள் சாடி உள்ளனர்.
