காங்., - எம்.எல்.ஏ.,வை நோக்கி செருப்பை காண்பித்த பா.ஜ.,வினர்
காங்., - எம்.எல்.ஏ.,வை நோக்கி செருப்பை காண்பித்த பா.ஜ.,வினர்
ADDED : மார் 29, 2026 03:51 AM

தாவணகெரே: பா.ஜ., அலுவலகத்தின் முன் பிரசாரம் செய்ய வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரை நோக்கி, பா.ஜ.,வினர் செருப்பை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாவணகெரே இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சமர்த்தை ஆதரித்து, சிக்கப்பல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தகுதியற்றவர்களுக்கு ஓட்டளிக்கக் கூடாது என, மறைமுகமாக, பா.ஜ., வேட்பாளரை விமர்சித்தார். இதற்கு, பா.ஜ.,வினர் கண்டனம் தெரிவித்தனர். பிரதீப் முடிந்தால் தாவணகெரேவுக்கு வந்து பிரசாரம் செய்யட்டும் என்று சவால் விடுத்தனர். இச்சவாலை ஏற்றுக்கொண்ட அவர், நேற்று தாவணகெரேவுக்கு பிரசாரம் செய்ய தன் காரில் வந்தார்.
மேலும், மாவட்ட பா.ஜ., அலுவலகத்திற்கு முன் தனது காரில் வந்தார். இதைப்பார்த்த, கட்சி அலுவலகத்தின் முன் திரண்டிருந்த பா.ஜ., தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். செருப்பு, துடைப்பம் போன்றவற்றை காண்பித்தனர். உடனே வெளியேறு என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதனால், காங்., -பா.ஜ., தொண்டர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. பதற்றம் நிலவியது. நிலைமையை சமாளிக்க போலீசார் முயற்சித்தனர்.
அப்போது, திடீரென தன் காரின் மேலே ஏறிய பிரதீப், நீளமான காங்கிரஸ் கொடியை அசைத்தபடியே நின்றார். இதையடுத்து, ஒரு வழியாக அவர் அங்கிருந்து போலீசார் உதவியுடன் பத்திரமாக வெளியேறினார். பின், அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை பார்த்து, பா.ஜ.,வினர் செருப்பு, துடைப்பத்தை காட்டுகின்றனர். இதுவே, பா.ஜ.,வினரின் அணுகுமுறை. பா.ஜ., - எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் முஸ்லிம் பெண்களை அநாகரிகமாக பேசி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு அதிகாரம் அளிக்க காங்கிரஸ் போராடி வருகிறது. பா.ஜ.,வினரின் சவாலை ஏற்றுக்கொண்டு தாவணகெரேவுக்கு வந்தேன். அதுவும், அவர்கள் கட்சி அலுவலகம் முன்பே வந்தேன். ஆனால், அவர்களால் என்னை எதுவும் செய்யமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
