/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு
/
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு
லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., சிறையில் அடைப்பு
ADDED : பிப் 23, 2026 04:48 AM

பெங்களூரு: கதக் மாவட்டம், சிரஹட்டி தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சந்துரு லமானி, 37. தனது தொகுதியில் சாலையோரம் தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு டெண்டர் வழங்குவதற்காக, கான்ட்ராக்டர் விஜய் பூஜாரியிடம், ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, சந்துரு லமானி, அவரது உதவியாளர்கள் மஞ்சுநாத் வால்மீகி, குரு லமானி ஆகியோரை, லோக் ஆயுக்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் தார்வாட் மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தலிங்கப்பா இரவு முழுதும் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின் நேற்று காலை மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின், தார்வாடில் இருந்து பெங்களூருக்கு அழைத்து வரப்பட்டனர். எலஹங்கா ஜுடீசியல் லே - அவுட்டில் உள்ள, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் வீட்டிற்கு, மூன்று பேரும் அழைத்து செல்லப்பட்டனர்.
நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது, எம்.எல்.ஏ., உட்பட மூன்று பேரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க, லோக் ஆயுக்தா தரப்பு அனுமதி கேட்கவில்லை. இதனால் மூன்று பேரையும் மார்ச் 2ம் தேதி வரை 10 நாட்கள் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து எம்.எல்.ஏ., உட்பட மூன்று பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், அரசியல் சதியால் சந்துரு லமானி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இதன் பின்னணியில் சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு கூறினர். காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து, விஜய் பூஜாரி எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.,வும், விஜய் பூஜாரியும் பேசும் ஆடியோ நேற்று வெளியானது. அதில் சந்துரு லமானி, 'உனது இஷ்டத்திற்கு எல்லாம் டெண்டர் தர முடியாது. டெண்டர் வேண்டும் என்றால் லஞ்சம் கொடு' என்று, மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
ஆடியோவில் இருப்பது அவரது குரல் தானா என்பதை கண்டறிய, அவரது குரல் மாதிரியை சேகரித்து, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, லோக் ஆயுக்தா போலீசார் அனுப்பி உள்ளனர். அதன் அறிக்கை கிடைத்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

