ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ., விளக்கம்
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ., விளக்கம்
ADDED : ஜூலை 09, 2026 09:14 PM

பெங்களூரு: ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், தனக்கு எதிராக அளிக்கப்பட்ட ஊழல் புகார் தொடர்பாக, தானாகவே முன் வந்து, லோக் ஆயுக்தாவுக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரின், ராஜாஜிநகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், மாநகராட்சி சார்பில் நடந்த பணிகளை, தனக்கு வேண்டப்பட்ட 'பினாமி' ஒப்பந்ததாரருக்கு, பணிகளை நடத்தாமல் பில் தொகை கிடைக்க செய்துள்ளார்.
சில பணிகள் நடந்திருந்தும், பணிகளின் தரத்தை பரிசோதிக்கவில்லை. சுரேஷ்குமாரால் மாநகராட்சிக்கு, 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என, குற்றம்சாட்டி, காங்கிரஸ் தொண்டர் சூர்ய முகுந்தராஜ் என்பவர், ஜூலை 2ம் தேதியன்று புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக, சுரேஷ்குமாருக்கு லோக் ஆயுக்தா நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை. ஆனால் அவர் தானாகவே முன் வந்து, 160 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன், லோக் ஆயுக்தாவுக்கு எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.
லோக் ஆயுக்தாவுக்கு, சுரேஷ்குமார் அளித்த விளக்கத்தில் கூறியுள்ள முக்கிய அம்சங்களாவன:
டெண்டரில் எந்த வீதிமீறலும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ.,க்கள் உட்பட, எந்த மக்கள் பிரதிநிதிகளும், டெண்டரில் பங்கேற்க சட்டத்தில் வாய்ப்பு இல்லை.
டெண்டர் தொடர்பான கோப்புகளில், மக்கள் பிரதிநிதிகள் முடிவு எடுத்து கையெழுத்திட அனுமதியில்லை. இது சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்வர். என் மீது அளிக்கப்பட்ட புகாரில், துளியும் உண்மை இல்லை.
ஒப்பந்ததாரருக்கு நான் உதவியதன் மூலம், மாநகராட்சிக்கு, 300 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினேன் என்பது, பச்சை பொய்.
என் மீது குற்றம்சாட்டியவர்கள், அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. என், 40 ஆண்டு கால பொது வாழ்க்கையில் ஒப்பந்தம் உட்பட, எந்த விஷயத்திலும் விதிகளை மீறியது இல்லை. அரசியல் நோக்கத்துடன், என் மீது புகார் அளித்துள்ளனர். என் கவுரத்துக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
