/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., பிரீத்தம்; ம.ஜ.த., நிகில் முற்றுகிறது வார்த்தை மோதல்
/
பா.ஜ., பிரீத்தம்; ம.ஜ.த., நிகில் முற்றுகிறது வார்த்தை மோதல்
பா.ஜ., பிரீத்தம்; ம.ஜ.த., நிகில் முற்றுகிறது வார்த்தை மோதல்
பா.ஜ., பிரீத்தம்; ம.ஜ.த., நிகில் முற்றுகிறது வார்த்தை மோதல்
ADDED : பிப் 11, 2026 09:42 AM

கர்நாடக மாநில பா.ஜ., செயலர் பிரீத்தம் கவுடா, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி இடையே, வார்த்தை மோதல் முற்றுவதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
தேசிய கட்சியான பா.ஜ.,வும், மாநில கட்சியான ம.ஜ.த.,வும், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மொத்தமுள்ள, 28 தொகுதிகளில், 19 இடங்களை வென்றன.
தற்போதைய நிலவரப்படி ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அவரது மகனும், மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சருமான குமாரசாமி ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடிக்கும், மேலிட தலைவர்களும் நல்லுறவு உள்ளது.
ஆனால் , கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., இடையே ஒருங்கிணைப்பே இல்லை. விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில், ம.ஜ.த.,வை கழற்றி விட்டு, தனியாக போட்டியிட வேண்டும் என்று, பா.ஜ., மேலிடத்திடம், இங்குள்ள தலைவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். இதனால், இரு கட்சிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இது ஒரு புறம் இருக்க, 2028 சட்டசபை தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெற்றால், குமாரசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று, அவரது மகனும், கட்சியின் இளைஞர் அணி தலைவருமான நிகில் குமாரசாமி கூறியது, பா.ஜ., தலைவர்களை கோபம் அடைய செய்துள்ளது.
ஹாசன் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வான, மாநில பா.ஜ., செயலரான பிரீத்தம் கவுடா, ''குமாரசாமி முதல்வராக வேண்டுமா, இல்லையா என்பது பற்றி முடிவு எடுக்க வேண்டியதே, நாங்கள் தான்,'' என்றார்.
இதுபோல மாண்டியாவின் கே.ஆர்.பேட் தொகுதியில், தற்போதைய ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு மீண்டும் வெற்றி பெறுவார் என்று நிகில் கூறிய நிலையில், பா.ஜ.,வின் நாராயண கவுடா தான் வேட்பாளர் என்று, பிரீத்தம் கவுடா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு இளம் தலைவர்களுக்கு இடையே வார்த்தை மோதல் முற்றும் நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பிரீத்தம் கவுடா மீது, பா.ஜ., ஒழுங்கு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ம.ஜ.த., வலியுறுத்தி உள்ளது.
- நமது நிருபர் -

