ADDED : ஆக 15, 2026 01:03 AM
பெங்களூரு: தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கி கொள்ளும் நுாதன நிகழ்வை நடத்த, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பெங்களூரு பேலஸ் மைதானத்தில் வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி, தக்காளி திருவிழா எனும் நுாதன நிகழ்வு நடக்க உள்ளது. இதில், பங்கேற்போர் தக்காளி பழங்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கி மகிழ்வர்.
இது போன்ற திருவிழா, ஸ்பெயின் போன்ற மேற்கத்திய நாடுகளில் நடைபெறும். இது, முதல் முறையாக பெங்களூரில் நடக்க உள்ளது. இதை, 'ஹைப்ஸ் வேவ்' என்ற தனியார் நிறுவனம் நடத்துகிறது.
இதில், பங்கேற்க ஒருவருக்கு 500 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து, மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் சேஷராகவாச்சார் கூறியதாவது:
தக்காளி போன்ற உணவு பொருட்களை கேளிக்கைக்காக, டன் கணக்கில் வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பலரும் உணவுக்கு கஷ்டப்படும் போது, இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படக்கூடாது. இவை விவசாயிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடியவை.
இவ்வாறு அவர் கூறினார்.
