நிதின் நபின் வருகையால் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்
நிதின் நபின் வருகையால் பா.ஜ., தொண்டர்கள் உற்சாகம்
ADDED : மே 27, 2026 12:03 AM

- நமது நிருபர் -
வரும், 2028 சட்டசபை தேர்தலுக்கு, கர்நாடக, பா.ஜ., இப்போதே தயாராகி வருகிறது. புதிய தேசிய தலைவராக பதவியேற்ற பின், முதன் முறையாக கர்நாடகாவுக்கு சமீபத்தில் நிதின் நபின் வந்திருந்தார். இவரது வருகை பா.ஜ., தொண்டர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பின், பா.ஜ.,வின் பார்வை, கர்நாடகா மீது பதிந்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இப்போதிருந்தே கட்சியை தயார் செய்தால், வெற்றி பெறலாம் என்பது, மேலிடத்தின் எண்ணமாகும்.
கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. முதற்கட்டமாக கட்சியின் சூழ்நிலையை தெரிந்து கொள்ள, முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய தலைவரை, கர்நாடகாவுக்கு மேலிடம் அனுப்பியுள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவர் மாற்றம், ஜி.பி.ஏ., தேர்தல், கட்சியை பலப்படுத்துவது உட்பட, பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்த தேசிய தலைவர் நிதின் நபின், கர்நாடகாவுக்கு வந்திருந்தார்.
தலைவர்களுடன் தொடர் ஆலோசனை நடத்துகிறார். மாநில தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை மாற்றும்படி, சில தலைவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், மாநில தலைமையை மாற்றும் எண்ணம், தற்போதைக்கு மேலிடத்துக்கு இல்லை. தேசிய தலைவர் மூலம் தன் முடிவை, மேலிடம் தெரிவித்துள்ளது.
வரும், 2028 சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், பா.ஜ.,வில் குழப்பம் உள்ளது. குமாரசாமியே முதல்வர் வேட்பாளர் என, ம.ஜ.த., அறிவித்துள்ளது.
அதே போல, பா.ஜ.,விலும், முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியுள்ளது. மாநில தலைவர் விஜயேந்திராவை முன்னிலைப்படுத்த, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவு கோஷ்டி முயற்சிக்கிறது. இதை தடுக்கும் வகையில், எதிர்கோஷ்டி செயல்படுகிறது.
அடுத்த சில மாதங்களில், முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்டினால், சட்டசபை தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக உதவியாக இருக்கும். இது குறித்து, மேலிடமும் ஆலோசிக்கிறது. தலைவர்களின் எண்ணத்தை தெரிந்து கொள்ள நிதின் நபின் வருகை உதவி புரிந்தது.
தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், 'கட்சியை வேரில் இருந்து பலப்படுத்த வேண்டும். அடுத்த சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு செயல்படுங்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து, கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். பொது மக்களுடன் தொடர்பில் இருங்கள்' என, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நிதின் நபீனின் வருகை, மாநில தலைமைக்கும், தொண்டர்களுக்கும் 'டானிக்' குடித்ததை போல, புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. கட்சிப்பணிகள் சூடுபிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் திட்டங்கள் வகுப்பதில், மாநில தலைமை ஈடுபடும். கட்சியில் தலைவர்கள் இடையே, ஒற்றுமை அவ்வளவாக இல்லை. இதை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு வரும் என, தொண்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, வரும் நாட்களில் நிதின் நபின், தலைவர்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
