ஒலிபெருக்கிக்கு தடை: ஊர்வலத்தை நிறுத்திய கிராமத்தினர்
ஒலிபெருக்கிக்கு தடை: ஊர்வலத்தை நிறுத்திய கிராமத்தினர்
ADDED : செப் 17, 2026 03:14 AM
ஹாசன்: விநாயகர் ஊர்வலத்தில், ஒலி பெருக்கி பயன்படுத்த போலீசார் அனுமதி அளிக்காததால், விநாயகர் சிலை இருந்த டிராக்டரை, சாலையிலேயே நிறுத்திவிட்டு கிராமத்தினர் சென்றனர்.
ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புரா தாலுகாவின், மாரனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஆண்டுதோறும் கிராமத்தின் நடுவே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, பூஜை நடத்துவர். மூன்று நாட்களுக்கு பின், கிராமத்தின் சாலைகளில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு சென்று கரைப்பர்.
அதேபோல, இம்முறையும் கவுரி மற்றும் விநாயகர் சிலைகளை அமர்த்தி, பூஜை செய்தனர். நேற்று மதியம் டிராக்டரில் விநாயகர் அமர்த்தி, கரைப்பதற்காக ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். டிராக்டரில் ஒலி பெருக்கிகளை கட்டி, ஆட்டம், பாட்டத்துடன் கிராமத்தினர் சென்றனர். ஊர்வலத்தை வழிமறித்த போலீசார், ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதி அளிக்கப்படாது என்றனர்.
போலீசாரின் நடவடிக்கையால், வெறுப்படைந்த கிராமத்தினர் ஊர்வலத்தை பாதியில் நிறுத்தி விட்டனர். விநாயகர் சிலை இருந்த டிராக்டரை, சாலையிலேயே நிறுத்திவிட்டு கிராமத்தினர் சென்று விட்டனர்.
