காணாமல் போன 2 சிறுமியர் சடலமாக கிணற்றில் கண்டுபிடிப்பு
காணாமல் போன 2 சிறுமியர் சடலமாக கிணற்றில் கண்டுபிடிப்பு
ADDED : அக் 05, 2025 03:56 AM
முல்பாகல்: விளையாடியபோது காணாமல் போன இரண்டு சிறுமியர், கிணற்றில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின் யளசேபள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் தன்யா பாய், 13, சைத்ரா பாய், 13. இவர்கள் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர்.
கடந்த 2ம் தேதி, தங்களின் வீட்டு முன் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்கு பின், அவர்கள் மாயமானர். கலக்கம் அடைந்த பெற்றோர், அக்கம், பக்கத்து வீடுகள், சுற்றுப்பகுதிகளில் தேடினர். எங்கும் தென்படாததால் முல்பாகல் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும் தேட துவங்கினர். யளசேபள்ளி அருகில் உள்ள குப்பம்பாளையா கிராமத்தில் உள்ள கிணற்றில், நேற்று காலையில் இரண்டு சிறுமியர் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறுமியரை கொலை செய்து, சடலங்களை யாரோ கிணற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் இடத்தை கோலார் போலீஸ் எஸ்.பி., நிகில் ஆய்வு செய்தார்.
